Press "Enter" to skip to content

“90 சதவீதம் குணம் அடைந்துவிட்டேன்” – விஜய் ஆண்டனி ட்வீட்

‘‘அன்பு இதயங்களே, நான் 90% குணம் அடைந்துவிட்டேன்” என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக லங்காவி தீவில் கடந்த சில நாட்களுக்கு முன், பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் பலத்த காயமடைந்தார். மலேசியாவில் ஆரம்பக்கட்ட சிகிச்சைப் பெற்ற அவர், பின்னர் சென்னை திரும்பினார்.

தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விபத்து குறித்து விஜய் ஆண்டனி, “மலேசியாவில் படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறேன். நான் அறுவைச் சிகிச்சையை முடித்துள்ளேன். விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அக்கறைக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 90சதவீதம் குணமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பு இதயங்களே, நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் ‘பிச்சைக்காரன் 2’ பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »