Press "Enter" to skip to content

நடிகர் மயில்சாமியின் உடல் தகனம்

சென்னை: மாரடைப்பால் காலமான பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் இறுதிச் சடங்களுக்குப் பின், சென்னை – வடபழனி மின் மயானத்தில் திங்கள்கிழமை (பிப்.20) தகனம் செய்யப்பட்டது.

பிரபல நடிகர் மயில்சாமி மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நடிகர் மயில்சாமி, சனிக்கிழமை இரவு சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அங்கு நடந்தது. இதில் பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார். 3.30 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. சாலிகிராமத்திலுள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் சென்ற இறுதி ஊர்வலத்துக்குப் பின்னர், வடபழனி மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மயில்சாமியின் மகன் மற்றும் குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர். > மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் – நடிகர் ரஜினிகாந்த்

மயில்சாமியின் திரைப் பயணம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மயில்சாமி சிறு வயதிலேயே திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தார். 1984-ம் ஆண்டு ‘தாவணி கனவுகள்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘கன்னிராசி’, ‘என் தங்கச்சி படிச்சவ’, கமலின்‘அபூர்வ சகோதரர்கள்’, ‘வெற்றிவிழா’, ரஜினிகாந்தின் ‘பணக்காரன்’,‘உழைப்பாளி’ உட்பட பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். மொத்தம் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜயகாந்த், சத்யராஜ், விஜய்,அஜித், விக்ரம், தனுஷ் உட்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு அவர் நடித்த கதாபாத்திரங்கள், ரசிகர்கள் மத்தியில்பெரிதும் பேசப்பட்டன. வடிவேலு,விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பெரிதும் வரவேற்பை பெற்றன.

‘பெண்ணின் மனதை தொட்டு’படத்தில் இலங்கை தமிழை, சென்னை வழக்கில் மாற்றிப்பேசுவதும், ‘பாளையத்து அம்மன்’ படத்தில் விவேக்குடன் நடனம் சாமியார் வேடத்தில் வருவதும் ரசிகர்களால் மறக்க முடியாதவை. மயில்சாமி நடித்து சமீபத்தில் ‘உடன்பால்’ என்ற படம் வெளியானது. கடைசியாக ‘கிளாஸ்மேட்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘நகைச்சுவை டைம்’ என்ற சின்னத்திரை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

மயில்சாமி கடந்த 2021-ம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். மயில்சாமிக்கு ஏற்கெனவே 2 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 2-வது அறுவை சிகிச்சை கடந்த நவம்பர் இறுதியில் நடந்தது. சிறந்த மிமிக்ரிகலைஞரான மயில்சாமி, கரோனா காலகட்டத்தில் தனது பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏராளமான உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »