மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா பற்றி பேசிய காணொளியில் பேசியிருப்பதாவது:
ஜெயலலிதாவின் 75 பிறந்த நாளில் அவர் இப்போது நம்மிடம் இல்லை என்பதை வருத்தத்துடன் நினைவூட்டிக் கொள்கிறேன். ஜெயலலிதாவை போல இன்னொரு பெண்மணியை பார்க்கவே முடியாது. அவர் அழகு, கம்பீரம்,அறிவு, துணிச்சல், ஆளுமை கொண்டவர். எம்ஜிஆருக்கு ‘புரட்சித்தலைவர்’ அப்படின்னு பெயர் வந்த காரணம் அனைவருக்கும் தெரியும். நடிகனாக இருந்து கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆனார். அது மிகப்பெரும் புரட்சி. அவர் மறைவுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, கட்சியில் மிகப்பெரிய திறமையான, அனுபவசாலியான தலைவர்கள் இருக்கும் போது, ஒரு தனி பெண்மணி பிளவுபட்டக் கட்சியை ஒன்றாக்கி, கட்சியை இன்னும் பெரிதாக வளர்த்து பல ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவை மதித்தார்கள். அவர் திறமையைப் பார்த்து பிரமித்தார்கள். ஒரு கால கட்டத்தில் எனக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு எதிராகப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கப்புறம் என் மகள் திருமணத்திற்கு அழைத்தபோது அதை எல்லாம் மறந்து திருமணத்திற்கு வந்து நடத்தி கொடுத்தார். அவ்வளவு பெரிய கருணை உள்ளம்.
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Source: Hindu