Press "Enter" to skip to content

இந்தியில் ‘பாகுபலி 2’ வசூல் சாதனையை முறியடித்த ஷாருக்கின் ‘பதான்’

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 2’ படத்தின் இந்திப் பதிப்பு வசூலை ஷாருக்கானின் ‘பதான்’ முறியடித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், இந்தியில் அதிகபட்ச வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை ‘பதான்’ பெற்றுள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம் என்பதால், ரசிகர்கள் திரையரங்கத்தில் குவிந்து வருகின்றனர்.

முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் முன்னேற்றத்தைக் கண்டது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்த படம் 8 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ.667 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது படம் வெளியாகி 5 வாரங்களை கடந்த நிலையில் படம் உலக அளவில் ரூ.1026 கோடியை வசூலித்துள்ளது.

இந்தியில் மட்டும் படம் ரூ.528.89 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியில் அதிகபட்ச வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை பெற்றுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ராஜமவுலியின் ‘பாகுபலி 2’ படம் இந்தியில் ரூ.510.66 கோடியை வசூலித்திருந்தது. தற்போது இந்த சாதனையை ‘பதான்’ முறியடித்துள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »