Press "Enter" to skip to content

“பிள்ளைகளை வைத்து மிரட்டுகிறார்… பணம்தான் எல்லாம்” – முன்னாள் மனைவி குறித்து நவாசுதீன் சித்திக்

மும்பை: தன்னையும், தனது பிள்ளைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார் என நடிகர் நவாசுதீன் சித்திக் மீது அவரது முன்னாள் மனைவி ஆலியா அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டில் தன் தரப்பு நியாயங்களை முன்வைத்து விளக்கம் கொடுத்துள்ளார் நவாசுதீன் சித்திக். இதனை சமூக வலைதளப் பதிவு வழியே அவர் பகிர்ந்துள்ளார்.

“இது குற்றச்சாட்டு அல்ல. எனது உணர்வுகளின் வெளிப்பாடு. எனது அதீத அமைதியின் காரணமாக அனைத்து இடங்களிலும் நான் மோசமானவன் என சித்தரிக்கப்படுகிறேன். என் பிள்ளைகள் அதை வேடிக்கையாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால்தான் நான் அமைதியாக இருந்தேன். எனது குணம் குறித்து ஒருதலைபட்சமாக சொல்லப்படும் கட்டுக்கதைகள் மற்றும் சமூக வலைதளங்கள், பத்திரிகைகளில் வெளியாகும் காணொளியை பார்த்து ஒரு குறிப்பிட்ட மக்கள் ரசிக்கின்றனர்.

நான், எனது தரப்பில் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். நானும், ஆலியாவும் விவாகரத்து ஆனவர்கள். நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக தனித்தனியே வசித்து வருகிறோம். எங்கள் பிள்ளைகள் குறித்து சில புரிதல்கள் எங்களுக்குள் உண்டு. எனது பிள்ளைகள் கடந்த 45 நாட்களாக பள்ளிக்கூடம் செல்லவில்லை. அவர்கள் ஏன் இந்தியாவில் உள்ளார்கள் என்ற காரணம் யாருக்கேனும் தெரியுமா? நாள்தோறும் எனக்கு, பிள்ளைகள் பள்ளிக்கு வரவில்லை என கடிதம் வந்து கொண்டுள்ளது. அவர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளியை தவறவிடுகிறார்கள்.

பணத்திற்காக பிள்ளைகளை துபாயில் இருந்து இந்தியா அழைத்து வந்துள்ளார் ஆலியா. மாதம் ரூ.10 லட்சம் அவருக்கு கொடுத்து வருகிறேன். அது தவிர கல்வி, மருத்துவம் உட்பட அனைத்து செலவுகளையும் நான்தான் கவனித்து வருகிறேன். அவர் துபாய் செல்வதற்கு முன்பு 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை மாதம் கொடுத்து வந்தேன். அவருக்கு சீரான வருவாயை உறுதி செய்ய வேண்டி மூன்று படங்களுக்கு நான் நிதி உதவி வழங்கினேன். மேலும், சொகுசு கார்களை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அவர் அதனை விற்று விட்டார். மும்பையில் குழந்தைகளுக்காக அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு குடியிருப்பை வாங்கிக் கொடுத்துள்ளேன். அதில் ஆலியா இணை உரிமையாளராக உள்ளார்.

துபாயில் அவர்கள் தங்கியுள்ள வீட்டுக்கு வாடகை செலுத்தி வருகிறேன். இருந்தும் ஆலியாவுக்கு பணம்தான் முக்கியம். அதனால் பல்வேறு வழக்குகளை என் மீதும், என் தாயார் மீதும் அவர் தொடுத்துள்ளார். இதை கடந்த காலங்களிலும் அவர் செய்துள்ளார். இது அவரது வழக்கம். அவர் கேட்கும் பணத்தை கொடுத்தால் வழக்குகளை திரும்பப்பெற பெறுவார்.

என் பிள்ளைகள் இந்தியா வந்தால் பாட்டி உடன் தங்க விரும்புவார்கள். அப்படி இருக்கும் சூழலில் அவர்களை யாரேனும் வீட்டை விட்டு வெளியேற்றுவார்களா என்ன? நான் அந்த சமயங்களில் வீட்டில் கூட இருக்க மாட்டேன். நான் வீட்டை விட்டு பிள்ளைகளை வெளியேற்றியதாக ஆலியா சொல்கிறார். அனைத்தையும் காணொளி படம் பிடிக்கும் வழக்கம் கொண்ட அவர் ஏன் அதை படம் பிடிக்கவில்லை.

அவரது நாடகத்தில் இப்போது பிள்ளைகளை இழுத்து வந்துள்ளார். இதன்மூலம் என்னை மிரட்டுகிறார். எனது கரியரை சிதைக்கும் நோக்கில் அவர் இதை செய்து வருகிறார். அவர் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இப்படித்தான் செய்வார்.

கடைசியாக ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பூமியில் எந்தவொரு பெற்றோரும் தனது பிள்ளைகளின் படிப்பைத் தவற செய்ய வேண்டும் என விரும்ப மாட்டார்கள். அவர்கள் எதிர்காலத்தை சிதைக்க மாட்டார்கள். அவர்கள் எண்ணம் எல்லாம் பிள்ளைகளுக்கு தங்கள் சக்திக்கு முடிந்த அளவுக்கு சிறப்பானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருக்கும். நான் சம்பாதிப்பது அனைத்தும் என் இரண்டு பிள்ளைகளுக்குதான். நான் சட்டத்தை முழுமையாக நம்புகிறேன். நிச்சயம் என் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் வெல்வேன்” என நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »