Press "Enter" to skip to content

“கவலைப்படாதீங்க…” – தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உதவ முன்வந்த ரஜினி

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் முடிந்ததும் நேரில் வந்து சந்திப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘என்னம்மா கண்ணு’, ‘பிதாமகன்’, ‘லூட்டி’, ‘கஜேந்திரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ரஜினியின் ‘பாபா’ படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தவர். தமிழில் பல படங்களை தயாரித்த வி.ஏ.துரை நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். மனைவி, மகளை பிரிந்துள்ள வாழும் அவர், தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், எழுந்து உட்காரும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். இருப்பினும் அவரது காலில் காயங்கள் இன்னும் ஆரவில்லை. அத்துடன் உடல் மெலிந்தும் அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருகிறார். அவருக்கு நடிகர் சூர்யா ரூ.2 லட்சமும், கருணாஸ் ரூ.50 ஆயிரமும் கொடுத்து உதவியுள்ளனர்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாத சூழலில் இருக்கும் தனக்கு உதவுமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு வி.ஏ.துரை கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் வி.ஏ.துரையை செல்போனில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ‘நான் இருக்கிறேன்; கவலைப்படாதீர்கள். `ஜெயிலர்’ படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் வந்து பார்க்கிறேன்’’ என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »