Press "Enter" to skip to content

கழுமரப் பின்னணியில் நடக்கும் கழுவேத்தி மூர்க்கன்

ஜோதிகா நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘ராட்சசி’ படத்தை இயக்கியவர் சை கவுதமராஜ். இவர் அடுத்து இயக்கும் படத்த்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். டி. இமான் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரிக்கிறார். படத்துக்கு ‘கழுவேத்தி மூர்க்கன்’என்று தலைப்பு வைத்துள்ளனர்.

படம்பற்றி இயக்குநர் சை கவுதமராஜ் கூறியதாவது: இது ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் கதை. உண்மைச் சம்பவக் கதை இல்லை என்றாலும் உண்மையாக நடக்கின்ற கதையைக் கொண்ட படம். உலகம் முழுவதும் ஒவ்வொரு விதமான மரண தண்டனை வழங்கப்பட்டு வந்திருக்கிறது. நம் ஊரில் கழுவில் ஏற்றிக் கொல்லும் தண்டனையும் இருந்திருக்கிறது. அதற்காகக் கழுவேற்றி மரம் இருந்திருக்கிறது. அதன் பின்னணியில்தான் இந்தப் படத்தின் கதை நடக்கிறது.

ஆனால் பீரியட் படம் இல்லை. படத்தில் ராமநாதபுரத்தையும் அதன் வெயில் மனிதர்களையும் அப்படியே பார்க்கலாம். நட்பு, காதல், துரோகம், அதில் இருக்கும் சதியை ரத்தமும் சதையுமாக இந்தப் படம் பேசும். அருள்நிதி இந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் சிறப்பாகப் பொருந்தி இருக்கிறார். சந்தோஷ் பிரதாப், ‘கன்னிமாடம்’ சயாதேவி, முனீஸ்காந்த், சரத் லோகிதாஸ்வா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இவ்வாறு சை கவுதமராஜ் தெரிவித்தார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »