Press "Enter" to skip to content

“குனீத் மோங்கா அளவுக்கு மூச்சுத்திணறல் எல்லாம் ஏற்படவில்லை” – ஆஸ்கர் மேடை அனுபவம் பகிர்ந்த கீரவாணி

“ஆஸ்கர் விருது மேடையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குனீத் மோங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெரிவித்துள்ளார்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. அந்தத் தருணங்கள் குறித்து பல்வேறு விஷயங்கள் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பேட்டியளித்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற சந்தோஷத்தை அவர் விவரிக்கையில் “இந்த முழு பிரபஞ்சமும் என் பிரார்த்தனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் அந்த அதிசயம் நடந்தது. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் விருதாளர் குனீத் மோங்கா அளவுக்கு எனக்கு மூச்சுத்திணறல் எல்லாம் ஏற்படவில்லை. குனீத் மோங்காவிற்கு ஆஸ்கர் மேடையில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த அதிர்ச்சியில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன? – அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கத்தில் 95-வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிஃபன்ட் விஸ்பரரஸ்’ (The Elephant Whisperers) ஆஸ்கர் விருது வென்றது. ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா இருவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது மேடையில் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸுக்கு மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டது என்றும், தன்னுடைய பேச்சு துண்டிக்கப்பட்டது என்றும் படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “என்னுடைய பேச்சு துண்டிக்கப்பட்டதால் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். அதிர்ச்சியாக இருந்தது. ‘இந்திய தயாரிப்பில் உருவான இந்திய படத்திற்கு கிடைக்கும் முதல் ஆஸ்கர் விருது இது’ என பெருமையுடன் சொல்ல நினைத்தேன். ஆனால், என்னுடைய பேச்சு அரங்கில் கேட்கப்படவில்லை. இந்தியாவின் தருணங்கள் என்னிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டன. உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இணையத்தில் காணொளி, புகைப்படம் மூலமாக பலரும் என் பேச்சு துண்டிக்கப்பட்டத்தை வருத்தத்துடன் பதிவிட்டிருந்ததை கண்டேன். பின்னர் என்னை ஆறுதல்படுத்திக் கொண்டு, மீண்டும் ஒருநாள் இதே மேடை ஏறி நிச்சயம் பேசுவேன் என சொல்லிக்கொண்டேன்” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »