Press "Enter" to skip to content

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை சட்ட விரோதமானது என அறிவித்து அதனை செயல்படுத்த தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஒய்.நரசிங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழகத்தில் இந்தாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் 13.9.2019-ல் அரசாணை பிறப்பித்துள்ளார். பொதுத்தேர்வில் தோல்வி அடையும் 5, 8-ம் வகுப்பு மாணவிகள் அடுத்த 2 மாதத்தில் மறு தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தில் வெற்றிப்பெற வேண்டும்.

இந்த சிறு வயதில் மாணவ, மாணவிகளை மறு தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது மாணவ, மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இதனால் பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும். தரமான கல்வி முறை அமலில் இருக்கும் நாடுகளில் கூட 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இல்லை. இருப்பினும் தமிழகத்தில் 5, 8-ல் பொதுத்தேர்வை அமல்படுத்துவதில் தொடக்கல்வித்துறை தீவிரமாக உள்ளது.
எனவே தமிழகத்தில் நடப்பாண்டில் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், அரசிதழ் வெளியீடு மற்றும் அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து அதனை, ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »