Press "Enter" to skip to content

தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் எனக்கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்ற கிளை , தமிழ் மற்றும் சமஸ்கிருத்ததில் குடமுழுக்கு நடத்த அனுமதி அளித்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், தஞ்சை பெரியகோயில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பினரும் வாதங்களை முன் வைத்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குடமுழுக்கு நடைபெறும் அன்று சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு கோயில் சம்பிரதாயங்களில் அரசியலமைப்பு விதிகள் மீறப்படும் நிலையிலேயே நீதிமன்றம் தலையிட இயலும் என தெரிவித்தனர்.

குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்தும் கொடுத்து, கடந்த காலங்களைப் போலவே நடத்தப்பட இருப்பதால் நீதிமன்றம் இதில் தலையிட இயலாது எனக் கூறினர். அத்துடன் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரிய வழக்குகளை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்துசமய அறநிலையத்துறை வழங்கிய அறிக்கை அடிப்படையில் குடமுழுக்கை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை குடமுழுக்கு நடந்து முடிந்த 4 வாரங்களில் தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »