கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக முழக்கமிட்ட அதிமுக பிரமுகர் தாக்கப்பட்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களும் பேரணிகளும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தேன்கனிக்கோட்டையில் பாஜக சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது, அதிமுகவை சேர்ந்த ராஜா என்பவர் மது போதையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக ஆதரவாளர்கள், ராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ராஜாவை மீட்டு அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai