Press "Enter" to skip to content

சிறுவனை செருப்பு கழற்ற சொன்னதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை’ – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

பேரன் மாதிரி இருந்ததால் சிறுவனை அழைத்து செருப்பை கழற்றச் சொன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த யானைகள் முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். யானைகள் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் நடந்து சென்ற போது அவரது செருப்பு புல் தரையில் மாட்டிக் கொண்டது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து அமைச்சர் கழற்றச் சொன்னார்.
சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற வைத்த அமைச்சர் – வீடியோ!

‘டேய் வாடா வாடா, செருப்பை கழற்றுடா’ என அமைச்சர் கூறியதும் அருகிலிருந்த சிறுவன் அவரது செருப்பை அகற்றினான். அதேபோல், அதிகாரி ஒருவரும் அதற்கு உதவினார். இந்த சம்பவம் நடந்த போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா, அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்நிலையில், சிறுவனை அழைத்து அமைச்சர் தனது செருப்பை கழற்ற வைத்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புதிய தலைமுறையில் அளித்த பேட்டியில், “யானைகள் முகாமிற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த விநாயகர் கோயில் ஒன்றில் சாமி கும்பிட சென்றோம். அப்போது, கோயிலுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து என்னுடைய செருப்பை கழற்றிவிடுமாறு சொன்னேன்.

பேரன் மாதிரி, சின்ன பிள்ளையாக இருந்ததால் தான் சொன்னேன். இதில், உள்நோக்கம் எதுவுமில்லை. என்னைப்பற்றி தவறாக வரும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துக் கொள்கிறேன். உதவியாளர்கள் எவ்வளவோ பேர் இருந்தாலும் சிறுவன் என்பதால் அவனை அழைத்தேன்” என்று விளக்கம் அளித்தார்.
 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »