தாயே குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்தது போலீசார் விசாரணையில் திடீர் திருப்பமாக தெரியவந்துள்ளது.
அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் அரசுப் பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் மற்றும் சுஷ்மிதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு வயது மகன் விகாஸ் கடந்த 5ஆம் தேதி மாலை வீட்டிலுள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், குழந்தை இறப்பில் மர்மம் உள்ளதாகவும் தந்தையே தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டு கொலை செய்ததாகவும் கூறி குழந்தையின் தாய் சுஷ்மிதாவும் தாத்தா சூசை மாணிக்கமும் காரியாபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக குழந்தையின் தாய் சுஷ்மிதாவே தன்னுடைய ஒரு வயதே ஆன குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது.
போலீசாரின் விசாரணையில், சுஷ்மிதா 2018 ஆம் ஆண்டு காரியாபட்டி அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து கொண்டிருந்த போது அமல்ராஜை காதலித்ததும், அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் சுஷ்மிதா 7 மாதக் கர்ப்பமாகியதும், பின்னர் இருவரது வீட்டில் பேசி முடிவு செய்து திருமணம் நடைபெற்றதும் தெரியவந்தது. ஆனால், கணவன் மனைவிக்குள் தொடர்ந்து பிரச்னை இருந்துள்ளது.
மேலும், கணவர் அமல்ராஜ் இந்தக் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கும் குழந்தையை கொன்றுவிடுமாறு சுஷ்மிதாவின் பெற்றோர் கூறவே, தண்ணீர் தொட்டியில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்து விட்டு சுஷ்மிதா நாடகமாடியுள்ளார். இந்த தகவல்களை போலீசார் விசாரணையில் சுஷ்மிதா ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆகவே குழந்தையின் தாய் மற்றும் தந்தை, தாத்தா, பாட்டி, மரியலூகாஸ், விமலா ஆகிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai