Press "Enter" to skip to content

1ம் தேதி தாக்கல் செய்யும் வரவு செலவுத் திட்டத்தில் நுகர்வோரை ஊக்குவிக்க சலுகை: பல பொருட்கள் விலை குறைய நடவடிக்கை

மும்பை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வரும் 1 ம் தேதி பட்ஜெட்தாக்கல் செய்ய இருக்கிறார். நுகர்வோரை ஈர்க்க பல பொருட்களுக்கு வரிச்சலுகை தரலாம் என்று தெரிகிறது. பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் பிரபல நிறுவனம் தன் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்ஜெட் மூலம் பல பொருட்களுக்கு சலுகை தந்து, குறுகிய கால சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க அரசு தவறினால், தற்போது நிலவும் பொருளாதார மந்நதிலை, மேலும் மோசமான நிலையை அடையும். அது அடிப்படை கட்டமைப்பையே அசைக்கும் நிலைக்கு சென்றுவிடும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020ம் நிதியாண்டில் 5 சதவீதம் என்ற அளவில் நீடிக்கிறது.

எனவே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் குறுகிய கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் அரசு உள்ளது. பொருளாதார தேவையை அதிகரிக்கவும், மக்களின் வாங்கும் சக்தியை வலுப்படுத்தும் வகையில் அரசு அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிகிறது. வரிகள் பிரிவில் அரசு 2 அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம். ஒன்று நிறுவனங்கள் மற்றொன்று தனிநபர் வருமான வரி சீர்திருத்தம் ஆகியவற்றில் மாற்றம் செய்யலாம். பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும் சமூக நலத் திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்.

இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும். மக்களின் வருமானம் பெருகி அவர்களின் வாங்கும் திறன் வலுப்பெறும். மேலும்தனிநபர் வருமான வரி முறையில் சிறிது மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது. வரி சலுகை அளிப்பதன் மூலம் நடுத்தர மற்றும் மாத ஊதியம் பெறுவோரின் வருவாய் அதிகரித்து அவர்களின் வாங்கும் சக்தி வலுப்பெறும். இதனால் நுகர்பொருள்கள் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் வரி வருவாய் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

அதேவேளையில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. வங்கிகள் வராக்கடன் சுமையால் தொழில் துறை உள்பட நுகர்வோருக்கு கடன் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றன. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்து வந்தாலும் அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதுபோன்ற இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது மத்திய அரசு. இருந்தபோதிலும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை தொழில்துறையினரிடம் ஏற்பட்டுள்ளது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »