சென்னை : ‘தமிழகத்தில் கூடுதலாக, 125 புதிய கிளைகள், இரண்டு ஆண்டுகளில் துவக்கப்பட உள்ளன’ என, எச்.டி.எப்.சி., வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, எச்.டி.எப்.சி., வங்கியின், தமிழக மண்டல தலைவர்கள் ஆர்.சுரேஷ், ராம்தாஸ் பரதன் கூறியதாவது:எச்.டி.எப்.சி., வங்கி, நாடு முழுவதும், 400 புதிய கிளைகளை, இரண்டு ஆண்டுகளில் துவக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும், 125 கிளைகள் புதிதாக துவங்கப்பட இருக்கின்றன. இதன் வாயிலாக, 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதே போல, தேவையான இடங்களில், ஏ.டி.எம்., மற்றும் பண மறுசுழற்சி இயந்திரங்களும் நிறுவப்படும்.
தமிழகத்தில், 1.5 லட்சம் கோடி வணிகம் இதுவரை நடந்துள்ளது. இதில், 89 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களாக வழங்கப்பட்டு உள்ளன. 62 ஆயிரம் கோடி ரூபாய், வைப்பு தொகையாக பெறப்பட்டுள்ளன. மேலும், வங்கி துறையின் சந்தை பங்களிப்பில், எச்.டி.எப்.சி.,யின் பங்களிப்பு, 16 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தில் 284 வங்கி கிளைகளும், 1,172 ஏ.டி.எம்., மையங்களும் உள்ளன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக உயர்ந்து உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Source: dinamalar