கடந்த 2019ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு மிக மோசமான ஆண்டாகவே இருந்துள்ளது. சொல்லப்போனால் அட்டோமொபைல் துறை படு வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும் நாட்டில் நிலவி வரும் மந்தநிலைக்கு மத்தியில் ஆட்டோமொபைல் துறையில் பலத்த நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பல ஆயிரம் பேர் தங்களது வேலையினை இழந்துள்ளனர். மேலும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் விற்பனையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
வாகன விற்பனை வீழ்ச்சி காரணமாக உற்பத்தியும் குறைக்கப்பட்டது. அதிலும் இந்த ஆண்டில் ஏப்ரல் 1 அன்று அமலுக்கு வரவிருக்கும் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப வாகனங்களை தயாரித்து விற்கும் சூழ்நிலையில், பிஎஸ் 4 விதிகளின் படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்க முடியாமல் தவித்து வரும் நிலையில், எப்படியேனும் பழைய வாகனங்களை விற்று தீர்க்க வேண்டும் என பலத்த தள்ளுபடிகளையும், சலுகைகளையும் உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனினும் விற்பனை பெரிதாக எழுச்சி கண்டதாக தெரியவில்லை.
வோடபோனுக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்.. எதற்காக பங்கு விற்பனை.. விரிவாக்கம் தான் காரணமா..!
இந்த நிலையில் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படவிருக்கும், மத்திய பட்ஜெட்டில் வாகன துறையினரை மீட்டெடுக்கும் வாய்ப்பு இருக்குமா, அப்படி என்னென்ன எதிர்பார்ப்புகள் வாகன துறையினர் மத்தியில் நிலவி வருகிறது. வாருங்கள் பார்க்கலாம்.
முதலாக ஜிஎஸ்டி வரி விகிதம், அதாவது 28% இருக்கும் ஜிஎஸ்டி வரி விகிதம் 18% ஆக குறைக்கப்படுமா என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் வாகனங்களை விற்கும் போது ஏற்படும் நிதிப்பிரச்சனைகளை தீர்க்க வாகனக் கடனில் எளிதான கொள்கைகள், மற்றும் பழைய வாகனங்களை 15 வருடங்களுக்கு மேல் உபயோகப்படுத்தக்கூடாது என்ற திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தால், வாகன விற்பனையானது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து ஊக்க அடிப்படையிலான வாகன தகர்வு கொள்கை குறித்தான எதிர்பார்ப்பும், இதன் மூலம் பழைய வாகனங்களை அழித்துவிட்டு புதிய வாகனங்களை வாங்கும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த கொள்கை நடைமுறைக்கு வந்தால் விற்பனை வளர்ச்சியடையும், மேலும் வாடிக்கையாளர்களின் தேவை அதிகரிக்கும் என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வளர்ச்சி அடைந்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்குரிய இறக்குமதி வரியை ரத்து செய்யவும் மத்திய அரசிடம் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் மின்சார வாகனங்களுக்கான விலை குறையும் எனவும், இதனை தொடர்ந்து மின்சார வாகன விற்பனை உயரும் எனவும் நம்பப்படுகிறது.
Source: Goodreturns