புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால், நமது வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து பரிசீலனை செய்யுமாறு, அரசாங்கத்தை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பான, எப்.ஐ.இ.ஓ., வின் டைரக்டர் ஜெனரல் அஜயா சஹாய் கூறியதாவது: இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக பங்குதாரராக, சீனா இருக்கிறது. இந்நிலையில், தற்போது உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக காலம் நீடித்தால், அது உள்நாட்டு தயாரிப்பாளர்களை பாதிக்கும்.குறிப்பாக, மொபைல் போன் தயாரிப்பாளர்களை மிகவும் பாதிக்கும். இவர்கள் குறிப்பிட்ட சில பாகங்களை சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே, சில இந்திய ஏற்றுமதியாளர்களிடம், ’என் 72” முகமூடிகளை இறக்குமதி செய்வது குறித்து, ஹாங்காங் மற்றும் சீனாவிலிருந்து விசாரணைகள் வந்துள்ளன. நாங்கள் ஏற்றுமதியாளர்கள் குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பி இருக்கிறோம்.
இந்தியாவிலிருந்து, பொறியியல் சாதனங்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், சீனாவில், கொரோனா வைரஸின் பாதிப்புகள் நீடிக்கும் என்றால், அது வர்த்தகத்தில் என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து பரிசீலிக்குமாறு, அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுஇருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Source: dinamalar