நாட்டு மக்களைக் கவர வேண்டும், அனைவருக்கும் பயன்படும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் பட்ஜெட் உருவாக்கப்பட்டால் அதில் கண்டிப்பாகத் தனிநபர் வருமான வரியில் குறைப்பு, ஊரகப் பகுதி வளர்ச்சி திட்டங்கள், விவசாயத் துறை சார்ந்த திட்டங்கள், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல்வேறு போக்குவரத்து, கட்டுமான திட்டங்கள் ஆகியவை இருக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் வளர்ச்சியில் கவனத்தைச் செலுத்துவாரா அல்லது மக்களைக் கவரும் திட்டங்களை அறிவிக்கப்போகிறாரா..?
ஆசியாவிலேயே சீனாவை விடவும் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இருந்தது நாம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் கடந்த 6 முதல் 7 வருடத்தில் மத்திய அரசின் பல்வேறு முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவைச் சந்தித்தது. இதனால் தற்போது இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி சுமார் 10 வருடச் சரிவை அடைந்துள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் 2வது முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டில் நுகர்வை அதிகரிக்கும் வகையிலும், முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், இவை இரண்டுக்கும் தடையாக இருக்கும் காரணிகளை நீக்கும் வகையில் பட்ஜெட் அறிக்கையைத் தயாரித்திருக்க வேண்டும்.
இதுமட்டும் அல்லாமல் இந்தியப் பொருளாதாரத்தை 2025ஆம் ஆண்டுக்குள்ள 5 டிரில்லியன் டாலர் மதிப்பு உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு. ஆனால் தற்போது நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்தால் வெறும் 4.8 சதவீதமாகத் தான் உள்ளது.
இப்படி இருக்கையில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கை அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகளை அள்ளிவீசும் அளவிற்கு மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும்.
Source: Goodreturns