பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்தி வருகிறார்.
இதில் விவாசாய துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் 16 தலைப்புகளின் கீழ் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஔவையார் எழுதிய ஆத்திச் சூடி குறித்து பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன். பூமி திருத்தி உண் என ஆத்திச்சூடியில் உள்ள ஔவையாரின் வரிகளை மேற்கோள் காட்டி விவசாயத்தின் அவசியத்தையும் மகத்துவத்தையும் கூறியுள்ளார்.
பூமி திருத்தி உண்
அதென்ன பூமி திருத்தி உண் என்று கேட்கிறீர்களா? விளை நிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் என்பதைத் தான் அப்படி மேற்கோள் காட்டியிருக்கிறார். அதாவது இருக்கக்கூடிய நிலத்தை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று விவசாயத்தின் மகத்துவத்தை பற்றி கூறியுள்ளார். கடந்த ஆண்டு புற நானூறு பாடலை பற்றி கூறியிருந்த நிர்மலா இந்த ஆண்டு ஆத்திசூடியை மேற்கோள் காட்டியுள்ளார்.
விவசாயக் கடன் இலக்கு
குறிப்பாக விவசாயம் மற்றும் பாசனத்துக்காக ஒதுக்கப்பட்ட 2.83 லட்சம் கோடி ரூபாயில், 1.6 லட்சம் கோடி விவசாயத்துக்கும், மீதம் பஞ்சாயத்து ராஜ் உள்கட்டமைப்புக்கும் செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் அடுத்து வரும் நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு 15 லட்சம் கோடி ரூபாய் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதென்ன தானியலட்சுமி
விவசாயத்திற்கு தேவையான விதைகளை சேமிக்க தானியலட்சுமி என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தனது பட்ஜெட்டில் கூறியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கான குளிர்பதன ரயில் திட்டம் உருவாக்கப்படும். இந்த ரயிலில் விவசாயப் பொருட்களை கோண்டு செல்ல பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
விவசாயத்துறைக்கு ஒதுக்கீடு
மேலும் கடந்த பட்ஜெட்டினை விட இந்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு 12,955 கோடி ரூபாய் நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். இதெல்லாவற்றையும் விட விவசாய பொருட்களை எடுத்து செல்ல தனி விமானம் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
Source: Goodreturns