புதுடில்லி: கடந்த ஜனவரி மாதத்தில், ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 1.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை எட்டி வருகிறது.கடந்த, 2017ம் ஆண்டு, ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, ஜி.எஸ்.டி., மூலமான வருவாய், இரண்டாவது முறையாக, 1.1 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை தொட்டுள்ளது.
கடந்த, 2019ம் ஆண்டு ஜனவரியில் வசூலான தொகையை விட, நடப்பு ஆண்டு ஜனவரியில் வசூலானது, 12 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டின் ஜனவரியில், மொத்த ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சத்து, 10 ஆயிரத்து, 828 கோடி ரூபாய். இதில், மத்திய ஜி.எஸ்.டி.,யான, சி.ஜி.எஸ்.டி., மூலமான வசூல், 20 ஆயிரத்து, 944 கோடி ரூபாய். மாநில ஜி.எஸ்.டி.,யான, எஸ்.ஜி.எஸ்.டி., வசூல், 28 ஆயிரத்து, 224 கோடி ரூபாய். ஒருங்கிணைந்த ஐ.ஜி.எஸ்.டி., வசூல், 53 ஆயிரத்து, 13 கோடி ரூபாய். கூடுதல் வரி வசூல், 8,637 கோடி ரூபாய்.
Source: dinamalar