டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாது பட்ஜெட்டை பல சவால்களுக்கும் மத்தியில் தாக்கல் செய்துள்ளார்.
இதில் இன்றைய எதிர்கால தூண்களான இளைஞர்களுக்கு என்னென்ன அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.
இன்றைய பொருளாதார மந்த நிலையில் நாடு இருக்கும் நிலையில், பொருளாதாரம் இன்னும் எவ்வளவு வீழ்ச்சி காணுமோ? இதனால் நிகழும் வேலையிழப்புகள் என பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் இன்றைய இளம் தலைமுறையினர். இந்த நேரத்தில் பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் காத்திருக்கின்றன இளைஞர்களுக்கு.
கல்வித்துறைக்கு ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் குறிப்பாக கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் அடுத்து வரும் நிதியாண்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திறன் மேம்பாட்டிற்கான நிதியாக 3,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர கல்வித்துறையை மேம்படுத்த நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
தொழில் முனைவோருக்கு சலுகை
தொழில் முனைவோருக்கு முதலீட்டிற்கு முந்தைய ஆலோசனையை வழங்க ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனங்களை தொடங்க எளிதாக அனுமதியை பெறுதல், வங்கி உதவிகள் போன்றவற்றை பெற இந்த குழு இளைஞர்களுக்கும், புதிய தொழில் முனைவோருக்கும் இது பெரிதும் உதவும்.
பயிற்சியுடன் வேலை
நாட்டில் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தப்பட வேண்டும். இதற்காக 2021 மார்ச் மாதத்துக்குள், 150 உயர் கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு பயிற்சியுடன் இணைந்து பட்டம், டிப்ளமோ படிப்புகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பினை பெறவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
ஆன்லைனில் கல்வி
இது தவிர மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கும், உயர் கல்வியை பெற வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கு பட்ட அளவிலான ஆன்லைன் (இணையதளம் வாயிலாக) கல்வி திட்டத்தை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதை ஆரம்பத்தில் தேசிய தர வரிசை கூட்டமைப்பில் இணைந்த 100 நிறுவனங்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உபயோகமான ஒரு திட்டமாகும்.
நிதி ஒதுக்கீடு
கல்வி உள்கட்டமைப்புக்கு நிதியளிப்புக்காக வெளிநாட்டு வணிகக்கடன் மற்றும் அன்னிய நேரடி முதலீடுகள் ஊக்கவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனால் கல்வித்துறையில் பெரும் மாற்றங்களைக் இது கொண்டு வரலாம். இது வருங்கால இளைஞர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
செவிலியர் பாரா மெடிக்கல்
செவிலியர்களுக்கான சிறப்பு படிப்புகள், பாரா மருத்துவ ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு வழங்குனர்கள் தங்கள் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் உதவும் என்றும் கூறப்படும். இது தவிர நாடு முழுவதிலும் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் இளம் பொறியாளர்களுக்கு ஒரு வருடம் வரை இண்டர்ஷிப் வழங்கப்படும்.
இந்தியாவில் படிப்பு
இந்தியாவில் படிப்பதற்கு ‘இன்ட் சாட்’ என்னும் தேர்வுமுறை பின்பற்றப்படும். இந்திய உயர்கல்வி மையங்களில் படிப்பதற்கான உதவித்தொகை பெறும் வெளிநாட்டு வீரர்களை இது மதிப்பீடு செய்ய உதவும். இது தவிர தேசிய காவல்துறை பல்கலைக் கழகம் உருவாக்கப்படும். இது தவிர தேசிய தடய அறிவியல் பல்கலைக் கழகம் உருவாக்கப்படும் என்றும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இந்த பட்ஜெட்.
Source: Goodreturns