டெல்லி: இந்திய பொருளாதாரம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், ஏற்றுமதி இறக்குமதி என அனைத்தும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட்டில் தங்களுக்கு ஏதேனும் சலுகைகள் இருக்குமா? துவண்டு போயுள்ள ஏற்றுமதியினை ஊக்குவிக்க வரிச்சலுகைகள் ஏதேனும் இருக்குமா? என்று பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கும் மத்தியில், அது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது.
இது ஒரு புறம் எனில், மறுபுறம் ஏற்றுமதியாளர்களை கடுமையாக பாதிக்கக்கூடிய ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது, சரி அப்படி என்ன அறிவிப்பு? இது எப்படி ஏற்றுமதியாளர்களை பாதிக்கும். வாருங்கள் பார்க்கலாம்.
எச்சரிக்கும் மூடிஸ்.. பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கு எதுவும் இல்லை.. இலக்கினை அடைவது கஷ்டம்..!
டிசிஎஸ் வரி விகிதம்
ஒரு வருடத்தில் ஒரு விற்பனையாளர் 10 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் போது இந்த டிசிஎஸ் வரி விகிதத்தினை செயல்படுத்த வேண்டும். அதிலும் ஒரு விற்பனையாளர் ஒரு வருடத்தில் ஒருவருக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்யும் போது, வாங்குபவரிடமிருந்து 0.1% வரியாக (டிசிஎஸ்) வசூலிக்க வேண்டும். இதில் கொடுமை என்னவெனில் பொருட்களை வாங்குபவரிடம் ஆதார் கார்டோ அல்லது பான் நம்பர் இல்லையெனில் அவர்களிக்கு இந்த டிசிஎஸ் (TCS – Tax Collected at Source) விகிதம் 1% வசூலிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிடிஎஸ் என்றால் என்ன?
சரி அதென்ன டிடிஎஸ் விகிதம். ஒருவர் வருமானத்துக்குண்டான வரி விடுபடாமல் இருப்பதற்காகவும், அனைத்து வரியும் சேர்த்து செலுத்தும் ஒரு நபருக்கு உண்டாகும் மொத்த வரிச்சுமையையும் தவிர்க்கவே, ஒரு நபருக்கு செலுத்தும் தொகையில் இருந்து பிடிப்பது டிடிஎஸ் (Tax Deducted at source) ஆகும். உதாரணம்- நீங்கள் உங்கள் நிறுவனத்திலிருந்து ஊதியம் பெறும்போது, உங்கள் ஊதியத்திலிருந்து டிடிஎஸ் பிடிப்பார்கள்.
அதென்ன டிசிஎஸ்?
அதே போல ஒரு சில பொருட்களை விற்கும்போதோ அல்லது குத்தகைக்கு விடும்போதோ அதற்குண்டாக தொகையை பெறும்போது, அதற்குண்டான தொகையை பெறும்போது வரியையும் சேர்த்து பெறுவார்கள். இதுவே டிசிஎஸ் என்று கூறப்படும். ஆக இந்த தொகையை ஏற்றுமதியாளர்கள் பொருளை வாங்குபவரிடம் இருந்து பெற கட்டாயப்படுத்தப்படுவதால், பொருள்களுக்கு கூடுதல் வரி செலுத்துவதாக வாங்குபவர் உணர வாய்ப்புள்ளது.
வாடிக்கையாளரை இழக்கக்கூடும்
இதனால் ஒரு விற்பனையாளர் அயல் நாட்டில் வாங்குபவர்களை இழக்கக் கூட வாய்ப்புள்ளது. ஏனெனில் அந்த பொருளை வாங்குபவரிடம் நிச்சயம் ஆதார் அல்லது பான் எண் இருக்கும் என்று கூற முடியாது. இதனால் அவர்கள் கூடுதலாக டிசிஎஸ் வரி விகிதம் 1% செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். இதனால் விற்பனையாளர் (Seller) பொருளை வாங்குபவரை (Buyer) இழக்கும் அபாயம் உள்ளது.
மோசமான பாதைக்கு வழிவகுக்கும்
இந்த வரி விதிப்பு திட்டமான சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வர்த்தகத்தினரை பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்றுமதியாளர்களில் பலர் தங்கள் பொருட்களை பெரும்பாலும் அயல் நாடுகளுக்கு தாம் ஏற்றுமதி செய்கின்றனர். ஆக அவர்களிடம் பான் ஆதார் இருக்க வாய்ப்பில்லை. ஆக நிச்சயம் இது ஒரு மோசமான பாதைக்குத் தான் வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
விலையை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம்
இதனால் ஏற்றுமதியாளர்கள் தங்களது கையிலிருந்து 1% டிசிஎஸ் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம். இல்லையெனில் அதிகளவு விலை வித்தியாசத்தில் அவர்களின் பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்படலாம். இந்த பிரச்சனையானது ஏற்கனவே முடங்கி போயுள்ள தொழில்துறையை மேலும் முடக்க வாய்ப்புள்ளது.
பாதிப்பு நமக்கு தான்
டெல்லியைச் சேர்ந்த தணிக்கையாளர் வேத் ஜெயின் இது குறித்து கூறுகையில், இந்த விதியால் ஏற்றுமதியாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. மாற்றாக இந்த விதியானது அனைத்து பெரிய நிறுவனங்களையும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். உதாரணத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் வரவு செலவு செய்யும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நினைத்து பாருங்கள். இது வாங்குபவரின் மூலதனத்தை பெரிதாக பதம் பார்க்கும். ஆக இந்த திட்டம் மேலும் சுணக்க நிலையை கொண்டு வரும் என்றும் கூறியுள்ளார்.
Source: Goodreturns