இதற்கு ஒரு புறம் பலத்த எதிர்ப்புகள் நிலவினாலும், அதற்கு மத்திய அரசு செவி சாய்ப்பதாக இல்லை. அப்படி ஒரு நிலையில் தான் பலத்த எதிர்ப்பு மத்தியில் தான் முதல் தனியார் ரயில் இயக்கப்பட்டது.
அந்த சமயத்தில் இது ஒரு சோதனை ஓட்டம் தான் என்றும் கூறியது. ஆனால் ஒன்று இரண்டாகி, இனி மூன்றாக போகிறது. போகிற போக்கை பார்த்தால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேஜஸ் ரயில்களை போல 1156 தனியார் ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறியிருந்தது பலித்து விடும் போல் இருக்கிறது.
மூன்றாவது தனியார் ரயில்
இந்த நிலையில் பட்ஜெட் குறித்தான பேச்சுகள் மறையும் முன்னரே அதற்குண்டான நடவடிக்கைகள் சத்தமேயில்லாமல் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்றே கூறலாம். சொல்லப்போனால் விரைவில் மூன்றாவது தனியார் ரயில் செயல்பாட்டுக்கு வரலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும் தேஜஸ் ரயிலை போலவே செயல்பாடுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
எங்கெங்கு செல்லும்
சரி இந்த மூன்றாவது தனியார் ரயில் எந்தெந்த வழியாக செல்லும் என்று தானே கேட்கிறீர்கள். இந்த ரயிலானது இந்தூர் முதல் வாரணாசி வரை செல்லும் என்றும், இந்திய ரயில்வே இதை விரைவில் தொடங்க தயாராக உள்ளதாகவும் ரயில்வே வாரியத் தலைவர் விகே யாதவ் கூறியுள்ளார். வழக்கம் போல இந்த ரயில் ஐஆர்சிடிசி-ஆல் இயக்கப்படும் என்றும், இந்த ரயிலானது வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
பல ரயில்கள் தனியாருக்கு
கடந்த பட்ஜெட் 2020ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேஜஸ் ரயிலைப் போலவே இன்னும் பல ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதிலும் இந்த ரயில்கள் பெரும்பாலும் மிக பிரபலமான சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மும்பை – அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் தீவிரமாக தொடரப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது தான் முதல் தனியார் ரயில்
இந்த ரயில் இந்த மாதத்தில் இயக்கப்படும் என்றும் ரயில்வே வாரிய தலைவர் யாதவ் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஐஆர்சிடிசி முதல் தனியார் ரயில் லக்னோ – டெல்லி வரையில் இயக்கப்பட்ட நிலையில், தற்போது அது வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கி வருகிறது. இந்த தனியார் ரயில் டெல்லி – லக்னோவை ஐந்தரை மணி நேரத்தில் கடக்கிறது.
இரண்டாவது தனியார் ரயில்
இதே இரண்டாவது தனியார் ரயில் மும்பை அகமதாபாத் வரையில் இயக்கப்படுகிறது. இந்த அதிவேக ரயில் தனது பயணத்தை ஆறு மணி நேரத்தில் இயக்குகிறது. இந்த நிலையில் இந்த தனியார் ரயில்களில் உள்ளதை போலவே மற்ற ரயில்களும் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்றாவது ரயிலும் இதைப் போலவே அதிவேக ரயிலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டைனமிக் கட்டணம்
ஐஆர்சிடிசி இரண்டு ரயில்களுக்கும் டைனமிக் கட்டண திட்டத்தினை பின்பற்றுகிறது. அதிகரித்த வேகம் மற்றும் சுறுசுறுப்பான வசதிகளைத் தவிர ஐஆர்சிடிசி தேஜஸ் எக்ஸ்பிரஸூடன் இரண்டு தனித்துவமான திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஒன்று தாமதத்திற்கு ஏற்ப இழப்பீடுகளை வழங்கி வருகிறது
தாமதத்திற்கு இழப்பீடு
தற்போது ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால் 100 ரூபாய் இழப்பீடும், இதே 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால், 250 ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் இதே போன்றதொரு திட்டத்தினை சரக்கு ரயிலிலும் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் அண்மையில் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலவச காப்பீடு
இது தவிர இந்த தேஜஸ் ரயிலில் பயணிகளுக்கு உணவு, 25 லட்சம் ரூபாய் வரை இலவச இன்சூரன்ஸ் காப்பீடும் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது ஐஆர்சிடிசி. இந்த நிலையில் மேலும் பல ரயில்கள் தனியார் ரயில் குறித்து ஆலோசனை செய்ய நிதி ஆயோக் அண்மையில் ஒரு வரைவை தயார் செய்தது. இதன் மூலம் 100 ரயில்வே தடங்கள் தனியாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ரயில்களை இயக்க ஆர்வம்
இந்த நிலையில் தற்போது டாடா ரியால்டி அன்ட் இன்ஃப்ரட்ரக்சர், பாம்பார்டியர், ஹூண்டாய் ரோட்டம் நிறுவனம், சிஏஎஃப் இந்தியா, ஹிட்டாச்சி இந்தியா அன்ட் சவுத் ஆசியா, அதானி போர்ட்ஸ் அன்ட் செஸ், எசெல் குழுமம், டால்கோ, சீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தனியார் ரயிலை இயக்க ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Source: Goodreturns