Press "Enter" to skip to content

‘டை’யில் முடிந்த 3-வது டி20 போட்டி: சூப்பர் சுற்றில் இந்தியா த்ரில் வெற்றி

ரோகித் சர்மா அடுத்தடுத்து இமாலய சிக்சர்கள் விளாச இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரோகித் சர்மா (65), விராட் கோலி (38), கேஎல் ராகுல் (27) ஆகியோரின் ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.

பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில் 31 ரன்னிலும், கொலின் முன்றோ 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருவரும் ஆட்டமிழந்த பின்னர் போட்டி இந்தியா பக்கம் திரும்பியது.

ஆனால் கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் வெற்றி இந்தியாவின் கையை விட்டு நழுவிக் கொண்டே இருந்தது. கேன்  வில்லியம்சன் 28 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் நியூசிலாந்து 11 ரன்கள் அடித்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. முகமது ஷமி வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை ராஸ் டெய்லர் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

கடைசி நான்கு பந்தில் இரண்டு ரன்களே தேவைப்பட்டது. இதனால் நியூசிலாந்து எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3-வது பந்தில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அவர் 48 பந்தில் 95 ரன்கள் விளாசினார்.

அடுத்து செய்ஃபெர்ட் களம் இறங்கினார். ஷமி பவுன்சராக வீசிய பந்தை செய்ஃபெர்ட்டால் சந்திக்க முடியவில்லை. இதனால் 4-வது பந்தில் அவர் ரன் அடிக்கவில்லை. ஐந்தாவது பந்திலும் ரன் அடிக்கவில்லை. ஆனால் விக்கெட் கீப்பர் கைக்கு பந்து சென்றபோது ‘பை’ மூலம் ஒரு ரன்னுக்கு ஓடினார். கடைசி பந்தில் ராஸ் டெய்லர் ஒரு ரன் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் முகமது ஷமி அவரை க்ளீன் போல்டாக்கினார்.

இதனால் நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்ததால் போட்டி ‘டை’யில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. பும்ரா பந்து வீசினார். முதல் இரண்டு பந்துகளில் பும்ரா இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் 3-வது பந்தை சிக்சருக்கும், 4-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் கேன் வில்லியம்சன். மார்ட்டின் கப்தில் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்தது.

இதனால் இந்தியா ஒரு ஓவரில் 18 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டிம் சவுத்தி பந்து வீசினார்.

முதல் பந்தில் ரோகித் சர்மா 2 ரன்களும், அடுத்த பந்தில் ஒரு ரன்களும் எடுத்தார். 3-வது பந்தை கேஎல் ராகுல் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தில் ஒரு ரன்னே எடுத்தார்.

இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ரோகித் சர்மா 5-வது பந்தை எதிர்கொண்டார். ஐந்தாவது பந்தை லாங்-ஆன் திசையில் இமாலய சிக்சருக்கு அனுப்பினார். இதனால் கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை ரோகித் சர்மா லாங்-ஆஃப் திசையில் சிக்சருக்கு தூக்க இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »