Press "Enter" to skip to content

பிரித்வி ஷாவுடன் போட்டி இல்லை: ஷுப்மான் கில்

நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போது, எதிரணி வீரர்களின் ‘ஷாட் பிட்ச்’ பந்து வீச்சு தாக்குதலை சமாளிப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும் என்று இந்திய இளம் வீரர் ஷுப்மான் கில் கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.

ரோகித் சர்மா காயமடைந்து தாயகம் திரும்பி விட்டதால் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வரிசை இடத்துக்கு ஷுப்மான் கில், பிரித்வி ஷா ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. சமீபத்தில் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற 2 டெஸ்டுகளில் இந்திய ‘ஏ’ அணிக்காக களம் கண்ட ஷுப்மான் கில் 83, 204, 136 ரன்கள் வீதம் குவித்தார். இதனால் அவர் டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பெற வாய்ப்புள்ளது.

இதையொட்டி 20 வயதான சுப்மான் கில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நானும், பிரித்வி ஷாவும் ஒரே சமயத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால் நீங்கள் சொல்வது போல் அணியில் இடத்தை பிடிக்க எங்கள் இடையே நீயா-நானா? போட்டி எல்லாம் கிடையாது. இருவரும் எங்களது வரிசையில் சிறப்பாக ஆடுகிறோம். எனவே ஆடும் லெவன் அணியில் யாரை தேர்வு செய்வது என்பது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது.

யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போம். வாய்ப்பை வீணாக்கி விடக்கூடாது.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ‘ஷாட் பிட்ச்’ தாக்குதலை தொடுத்து நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார்கள். குறிப்பாக நீல் வாக்னெர் இந்த யுக்தியை அதிகமாக கையாள்கிறார். நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பார்த்தால், உண்மையிலேயே அவர்கள் ‘ஷாட்பிட்ச்’ பந்துவீச்சை சார்ந்து இருந்தது புலப்படும்.

எனவே ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு அணியாக நாம் ‘ஷாட் பிட்ச்’ பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து விடக்கூடாது. இதை சமாளித்து விட்டால், இன்னிங்சில் நல்ல நிலையை எட்ட அது உதவிகரமாக இருக்கும்.

நியூசிலாந்தில் காற்றின் தாக்கம், குறிப்பாக பேட்டிங் செய்யும் போது முக்கிய பங்கு வகிக்கும். காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ப பந்து விச்சாளர்கள் வியூகம் வகுப்பார்கள். காற்றின் தாக்கத்துக்கு மத்தியில் தொடர்ந்து புல் மற்றும் ஹுக் ஷாட்டுகளை ஆடுவது எளிதல்ல.

என்னை தொடக்க ஆட்டக்காரராக (இந்திய ஏ அணிக்காக) இறங்க சொன்னபோது அது எனக்கு புதியதாக தோன்றவில்லை. ஏனெனில் எனது மாநில அணிக்காக (பஞ்சாப்) ஏற்கனவே தொடக்க வீரராக விளையாடிய அனுபவம் உண்டு. 4-வது வரிசையில் ஆடும்போது, ஏற்கனவே 2 விக்கெட்டுகள் சரிந்திருக்கும். அது மாறுபட்ட சூழல், வித்தியாசமான அழுத்தம் கொண்டது.

ஆனால் தொடக்க வீரராக இன்னிங்சை தொடங்குவது முற்றிலும் வேறு வகையான சவாலாகும். ஒட்டுமொத்த அணிக்கும் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அவ்வாறு செய்தால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் பணி எளிதாகி விடும்.

இங்குள்ள ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு உகந்ததாக உள்ளன. அதுவும் நாங்கள் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் பகலில் விளையாடியபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு அருமையாக ஒத்துழைத்தது. ஆனால் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வது மட்டுமே ஒரே சவாலாக இருந்தது. அதுவும் நன்கு எழும்பிய பந்துகள், தொடர்ச்சியாக அது போலவே வந்தது.

நல்ல உடல்தகுதியுடன், நம்பிக்கையுடன் இருந்தால் நீண்ட இன்னிங்சை விளையாட முடியும். சோர்வு ஏற்படாது. நான் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் என்னால் 300 அல்லது 350 பந்துகளை தாக்குப்பிடித்து விளையாட முடியும் என்பதில் உறுதியாக நம்புகிறேன். நீண்ட இன்னிங்ஸ் பேட்டிங் செய்து விட்டு, அதன் பிறகு உடனடியாக களம் இறங்கும்போது, சோர்ந்து விடமாட்டேன். எனது கால்கள் தளராது. ஆனால் இவை எல்லாம் சவாலான விஷயமாகும்.

நான் வளர்ந்து வரும் ஒரு வீரர். கடந்த சில ஆண்டுகளில் நிறைய கற்று இருக்கிறேன். போதுமான பயிற்சி பெற்றுள்ள நான் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு சுப்மான் கில் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »