தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
கேப் டவுன்
கேப்டவுனில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.
வார்னர் 37 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 பந்தில் 55 ரன்னும் (6 பவுண்டரி,1 சிக்சர் ), ஸ்டீவ் சுமித் 15 பந்தில் 30 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர். ரபடா, நிகிடி, பிரிட்டோரியஸ், ஷம்சி, நோட்ஜே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 15.3 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வான்டார் துஸ்சன் அதிகபட்சமாக 24 ரன் எடுத்தார். ஸ்டார்க், ஆஷ்டோன் அகர் தலா 3 விக்கெட்டும் கம்மின்ஸ், மிட்சேல் மார்ஷ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி முதல் போட்டியில் 107 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 12 ரன்னில் வெற்றி பெற்றது.
அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது.
Related Tags :
Source: Maalaimalar