Press "Enter" to skip to content

பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு தொடங்க வேண்டும் – மிதாலிராஜ் வேண்டுகோள்

பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அடுத்த ஆண்டு தொடங்க வேண்டும் என்று இந்திய பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி:

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பெண்களுக்கான லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் இன்னும் பெண்களுக்கான லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டி தொடரின் போது 3 பெண்கள் அணிகள் பங்கேற்ற காட்சி போட்டி மட்டும் அரங்கேறியது.

இந்த மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி, வலுவான ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு முதல்முறையாக கோப்பையை வெல்ல கிடைத்த நல்ல வாய்ப்பை கோட்டைவிட்டது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய பெண்கள் கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து முடிவு செய்ய வேண்டிய சரியான தருணம் இதுவாகும்‘ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்திய பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை விரைவாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

‘பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் என்றென்றும் காத்து இருக்கக்கூடாது. அவர்கள் அடுத்த ஆண்டில் (2021) பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை தொடங்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். முதலில் சற்று சிறிய அளவில் கூட இந்த போட்டியை தொடங்கலாம். தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட மாற்றம் செய்யலாம். ஆண்களுக்கான ஐ.பி.எல். போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதனை பெண்களுக்கான முதலாவது போட்டியில் 5 அல்லது 6 வெளிநாட்டு வீராங்கனைகள் என்று முடிவு செய்யலாம்.

முழுமையான ஐ.பி.எல். போட்டியை நடத்தும் அளவுக்கு நம்மிடம் போதுமான வீராங்கனைகள் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். தற்போது உள்ள ஐ.பி.எல். அணிகளை நிர்வகிக்கும் உரிமையாளர்கள் பெண்கள் அணியை தொடங்க முனைப்பு காட்டினால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவுடன் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை தொடங்க முடியும். இந்த போட்டியை தொடங்குவதில் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது. போட்டி தொடங்கி நல்ல நிலையை எட்டிய பிறகு வெளிநாட்டு வீராங்கனைகளின் எண்ணிக்கையை 4 ஆக குறைக்கலாம்.

பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அனுபவம் இல்லை என்ற காரணத்தை காட்டி அவருக்கு ஒருநாள் போட்டிக்கான அணியில் வாய்ப்பு அளிக்காமல் இருக்கக்கூடாது’ இவ்வாறு மிதாலிராஜ் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »