ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாத ஊழியர்கள் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ள நிலையில், முகமது ஷமி அப்படி ஒருவரை சந்தித்ததை விவரிக்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்கத்து மாநிலத்தில் வேலைப்பார்த்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
நீண்ட நாள் ஊரடங்கு என்பதால் குஜராத், ராஜஸ்தான், டெல்லியில் வேலைப்பார்க்கும் உத்தர பிரததேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப முயற்சி செய்தனர். வாகனங்கள் ஏதும் இல்லாததால் நடந்தே சொந்த ஊர் திரும்ப முடிவு செய்தனர்.
சில ஊழியர்கள் பசியால் மயக்கம் அடைந்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையை சந்தித்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘பீகாரைச் சேர்ந்த ஒருவர் ராஜஸ்தானில் இருந்து நடந்து வந்திருக்கிறார். லக்னோவில் இருந்து இன்னும் பீகாருக்கு அவர் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். அவருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை குறித்து ஏதும் தெரியவில்லை.
என்னுடைய வீட்டில் பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவை நான் பார்த்தபோது அவர் பசியால் எனது வீட்டின் வாசல் பக்கத்தில் மயங்கி கிடந்தார். ஆகவே, நான் அவருக்கு உணவு வழங்கி அனுப்பி வைத்தேன்.
இதுபோன்று தவிக்கும் சிலருக்கு உதவி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். புலம்பெயர்ந்த வீரர்கள் சிலர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனது வீடு நெடுஞ்சாலை அருகில் உள்ளதால், இதுபோன்ற மக்களை பார்க்க முடிகிறது. என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
Related Tags :
Source: Maalaimalar