அடுத்த அறிவிப்பு வரும்வரை ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறிய நிலையில், எங்கள் நாட்டில் நடத்தலாம் என இலங்கை கிரிக்கெட வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் எந்தவொரு விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் அடுத்த அறிவிப்பு வரும்வரை தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பும் முன் இலங்கை இயல்பு நிலைக்கு திரும்பி விடும். இதனால் எங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு முன் இலங்கை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுவிடும். இதனால் ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்த முடியும். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இதுகுறித்து கடிதம் எழுத இருக்கிறோம்’’ என்றார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கையில் 238 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Source: Maalaimalar