கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, கரடு முரடான அபாயகரமான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல் உள்ளது என கங்குலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இன்று காலை நிலவரப்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இன்றுடன் 40 நாட்கள் முழு ஊரடங்கு முடிவடைகிறது. இருந்தபோதிலும் இந்தியாவில் கொரோனாவின் செயின் அறுக்கப்படவில்லை. தற்போதுதான் முக்கிய நகரங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மேலும் இரண்டு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதுள்ள நிலை கரடு முரடான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவதற்கு இணையான சூழ்நிலையாக உள்ளது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘தற்போதுள்ள சூழ்நிலை அபாயகரமான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று உள்ளது. சீமிங் மற்றும் ஸ்பின்னிங் ஆகியவற்றிற்கு பந்து நன்றாக துணைபோகும். பேட்ஸ்மேன் சற்று தவறு செய்தாலும் அவ்வளவுதான்.
பேட்ஸ்மேன் ரன்கள் அடிக்க வேண்டும். அதேவேளையில் சிறிய தவறு கூட செய்யாமல் கவனமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் போட்டியை ஜெயிக்க முடியும். தற்போதுள்ள சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. ஆனால், ஒருங்கிணைந்து இதில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
Related Tags :
Source: Maalaimalar