Press "Enter" to skip to content

இந்திய அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது – ஹாக்கி இந்தியா அறிவிப்பு

கொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

பெங்களூரு:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி மற்றும் குறிப்பிட்ட சில தடகள வீரர்கள் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் சாய் மையம் மூடப்பட்டு இருந்தாலும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர்கள் மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளரங்கில் பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு விதிமுறையில் தளர்வு செய்யப்பட்டு இருப்பதால் கடந்த திங்கட்கிழமையில் இருந்து வீரர்கள் வெளிப்புற மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையில் பெங்களூருவில் உள்ள சாய் மையத்தில் சமையல்காரராக வேலை பார்த்து வந்த ஒருவர் கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார். தனது உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்து இருந்ததை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக கடந்த வெள்ளிக் கிழமை நடந்த சாய் ஆலோசனை கூட்டத்தில் மரணம் அடைந்த அந்த சமையல்காரரும் பங்கேற்றதாக கூறப்படுவதால் சாய் மையத்தில் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாகவும், அங்கு பணியாற்றும் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இது குறித்து பெங்களூரு ‘சாய்’ மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த மார்ச் 10-ந்தேதி முதல் சமையல்காரர் உள்பட 60 ஊழியர்கள் வெளியில் உள்ள அவர்களது வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். கடைசியாக அந்த சமையல்காரர் மார்ச் 15-ந்தேதி சாய் மையத்துக்கு வந்தார். ஆனால் அவர் பிரதான நுழைவு வாயிலை தாண்டி உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாவலர் உள்பட 4-5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சாய் வளாகம் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது நுழைவு வாயில் பகுதி, 2-வது ‘ஏ’ பகுதி, 3-வது ‘பி’ பகுதியாகும். வீரர்கள் அனைவரும் ‘பி’ பகுதியில் முழுமையான பாதுகாப்புடன் உள்ளனர். நுழைவு வாயிலுக்கும், வீரர்கள் தங்குமிடத்துக்கும் ரொம்ப தூரம் உள்ளது. வீரர்கள் அனைவரும் கடந்த 2 மாதங்களாக தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்கள். வீரர்கள் தங்கும் இடத்துக்கு சமையல்காரர் செல்வதற்கு அனுமதி கிடையாது. எனவே வீரர்கள் யாரும் பயப்பட தேவையில்லை’ என்றார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலினா நார்மன் கருத்து தெரிவிக்கையில், ‘பெங்களூரு சாய் மையத்தில் இருந்து இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை. ஏனெனில் அங்கு தான் நாட்டின் சிறந்த பயிற்சி வசதிகள் இருக்கிறது. அங்கிருந்து வெளியேற நாம் நினைத்தால் கூட அதனை நடைமுறைப்படுத்துவது என்பது முடியாத காரியமாகும். ஏனென்றால் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது’ என்று கூறினார். 

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »