Press "Enter" to skip to content

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்

கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், தென்ஆப்பிரிக்கா வந்து இந்தியா மூன்று டி20 போட்டிகளில் விளையாட கங்குலியிடம் சம்மதம் வாங்கிவிட்டார் ஸ்மித்.

மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. கடைசி இரண்டு போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சத்தால் ரத்து செய்யப்பட்டன

தென்ஆப்பிரிக்க வீரர்கள் பாதுகாப்பாக சொந்த நாடு திரும்பினர். அதன்பின் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளது.

ஜூன் 15-ந்தேதிக்குப்பின் ரசிகர்கள் இன்று வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகளை நடத்த ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் இயக்குனர் கிரேம் ஸ்மித், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியுடன் டெலிகான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய அணி ஆகஸ்ட் மாதம் தென்ஆப்பிரிக்கா வந்து மூன்று டி20 போட்டிகளில் விளையாட சம்மதம் வாங்கிவிட்டார்.

இந்த போட்டிகள் ஐசிசி-யின் போட்டி அட்டவணைக்குள் வரவில்லை. இருநாட்டின் கிரிக்கெட் போர்டு இந்த முடிவை எடுத்துள்ளன. ஒருவேளை ஆகஸ்ட் மாத இறுதியில் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், அடுத்த கோடைக்காலத்தில் நடத்தப்படும் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இயக்குனர் கிரேம் ஸ்மித் இதுகுறித்து பேசுகையில் ‘‘நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று போட்டிகளை நடத்த சம்மதம் பெற்றுள்ளோம். ஆகஸ்ட் மாதம் இறுதியில் என்ன நடக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் ஏதும் கூற இயலாது. ஆனால் சமூக இடைவெளி, ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த முடியும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

‘‘இந்தியா தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடினால் தென்ஆப்பிரிக்கா அணியின் நிதி நெருக்கடியை சமாளிக்க முக்கிய காரணமாக அமையும். 2019-2020 சீசனில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு சுமார் 36 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது’’ என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »