Press "Enter" to skip to content

பாண்ட்யாவின் ஜெர்சி எண் குறித்த ரகசியம் வெளியானது

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் ஜெர்சி எண் குறித்த ரகசியம் வெளியானது.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. 26 வயதான இவர் 2016-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.

ஹர்திக் பாண்ட்யாவின் ஒருநாள் போட்டி ஜெர்சியில் 228 என்ற நம்பர் இடம் பெற்று இருந்தது.

இதற்கு என்ன காரணம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியது. தற்போது அதற்கான ரகசியம் வெளியாகி உள்ளது.

புள்ளியல் நிபுணரான மோகன்தாஸ் மேனன் இதற்கு பதில் அளித்து உள்ளார். கடந்த 2009-ல் டிசம்பரில் மும்பை அணிக்கு எதிரான விஜய் மெர்ச்சன்ட் டிராபி போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர்) பரோடா அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தினார்.

இந்த ஆட்டத்தில் அவர் 8 மணி நேரம் பேட்டிங் செய்து 391 பந்துகளில் 228 ரன்கள் குவித்தார். தற்போது வரை அவர் அடித்த ஒரே இரட்டை சதம் இதுவாகும். இதுதான் அதிகபட்ச ரன்னாகவும் இருக்கிறது.

இதனால்தான் இந்த நம்பரை அவர் ஜெர்சியில் வைத்துள்ளார்.

இதுகுறித்து ஹர்த்திக் பாண்ட்யாவின் பயிற்சியாளர் ஜிதேந்திரா கூறியதாவது;-

இந்த தொடர் ஹர்திக் பாண்ட்யா தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய முதல் சீசன் ஆகும். இந்த போட்டியில் பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சாதித்தார்.

5 விக்கெட் கைப்பற்றிய அவர் சிறந்த ஆல்ரவுண்டராக அடையாளம் காணப்பட்டார். இதன்பிறகு 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாட தேர்வானார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹர்திக் பாண்ட்யா நீண்ட காலம் 228 எண் இடம் பெற்றிருந்த ஜெர்சியை பயன்படுத்தவில்லை. அவரது ஜெர்சியில் 33 என்ற நம்பர் இடம் பெற்றுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »