Press "Enter" to skip to content

20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும்- தெண்டுல்கர்

நிலைமையை ஆராய்ந்து 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெண்டுல்கர் கூறியுள்ளார்.

மும்பை:

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக இந்த போட்டி அங்கு நடப்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்குமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பதை இறுதிசெய்ய அடுத்த மாதம் வரை காத்திருப்பது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருக்கிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் தலைவிதி குறித்து என்னிடம் கேட்டால், அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவை பொறுத்தது. திட்டமிட்டபடி போட்டியை நடத்த முடியுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதே சமயம் நிதி நிலைமை உள்ளிட்ட இன்னும் பல முக்கிய அம்சங்களையும் இந்த விவகாரத்தில் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதில் முடிவு எடுப்பது கடினமானது தான். ஆனால் கிரிக்கெட் நடக்க வேண்டும். அதை விட பெரிது எதுவும் இல்லை.’ என்றார்.

மேலும் தெண்டுல்கர் கூறுகையில், ‘ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்துவது நன்றாக இருக்காது. ஸ்டேடியத்திற்குள் ரசிகர்கள் இல்லாமல் உற்சாகமான சூழலை உருவாக்குவது கடினம். கேலரியில் ரசிகர்களை பார்க்கும் போதெல்லாமல் அதுவே சில நேரம் உங்களுக்குள் உத்வேகத்தை கொண்டு வரும். 25 சதவீதம் அளவுக்கு ரசிகர்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் படிப்படியாக மற்ற நாடுகளும் கிரிக்கெட் விளையாட தொடங்கும்.’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »