Press "Enter" to skip to content

2011 உலக கோப்பை பைனல்: சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து காவல் துறை விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவு

2011 உலக கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக இலங்கை முன்னாள் மந்திரி கூறிவந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டோனி தலைமையில் இந்திய அணி 2011-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உலகக்கோப்பை கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருந்தது.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டம் நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகே சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இறுதிப் போட்டியை இலங்கை விற்று விட்டதாகவும், வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும், சில குழுக்கள் இதில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சூதாட்ட குற்றச்சாட்டை அப்போதைய கேப்டன் சங்ககரா மற்றும் ஜெயவர்த்தனே நிராகரித்து இருந்தனர். இது அபத்தமானது. இதற்கான ஆதாரத்தை கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை முன்னாள் கேப்டன் அரவிந்த டி சில்வா கடந்த வாரம் வலியுறுத்தி இருந்தார். மற்றொரு முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா இறுதிப்போட்டியில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்தக் சூதாட்ட புகார் தொடர்பாக இலங்கை விளையாட்டு அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில்  கூறப்படும் சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை விளையாட்டு அமைச்சக செயலாளர் ருவன்சந்திரா  கூறியதாவது:-

சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்துகிறது. இந்த குற்றவியல் விசாரணை தொடங்கிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »