Press "Enter" to skip to content

மாநில விளையாட்டு அமைச்சர்களுடன் மத்திய மந்திரி ஆலோசனை

கொரோனாவுக்கு பிறகு போட்டிகளை தொடங்குவது குறித்து மாநில விளையாட்டு அமைச்சர்களுடன் மத்திய மந்திரி ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி:

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 4 மாதங்களாக நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் வீரர்கள் மட்டும் அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்றி பயிற்சியை தொடங்கலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு வீரர்கள் பயிற்சியை தொடங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?. விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச விளையாட்டு அமைச்சர்களுடன், மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வீடியோ கான்பரன்ஸ் மூலம் 2 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.

இதில் முதல் நாளான நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் உள்பட 18 மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ‘விளையாட்டு துறை மேம்பாட்டு விஷயத்தில் மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கொரோனாவினால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பில் இருந்து விளையாட்டை மீட்டு நல்ல நிலைக்கு மேம்படுத்த சரியான செயல்திட்டம் இந்த ஆலோசனை கூட்டம் முடிவில் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு மாநிலமும் ஒன்று அல்லது இரண்டு விளையாட்டை தத்தெடுத்து அதனை முன்னேற்ற எடுக்கும் முயற்சிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் போதிய நிதியுதவி அளிக்கும்’ என்று தெரிவித்தார்

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »