Press "Enter" to skip to content

வெ.இண்டீஸ்க்கு எதிரான கடைசி சோதனை: சதத்தை நோக்கி ஒல்லி போப்: முதல் நாளில் இங்கிலாந்து 258/4

மான்செஸ்டரில் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி டொமினிக் சிப்லி, ரோரி பேர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிப்லி ரன்ஏதும் எடுக்காமல் கேமர் ரோச் பந்தில் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் 17 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். 2-வது டெஸ்டில் சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் 20 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். மறுபக்கம் விளையாடிய ரோரி பேர்ன்ஸ் அரைசதம் அடித்தார். என்றாலும் 57 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து 122 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஒல்லி போப் உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜேடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒல்லி போப் அரைசதம் அடித்து சதத்தை நோக்கிச் சென்றார். கடும் விமர்சனத்திற்குள்ளான ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார்.

இங்கிலாந்து அணி 85.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஒல்லி போப் 91 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கேமர் ரோச் 2 விக்கெட்டும், சேஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »