Press "Enter" to skip to content

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் : இந்தியா- லாத்வியா இன்று மோதல்

பெண்கள் அணிக்குரிய பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இ்ந்திய அணி, லாத்வியாவை எதிர்கொள்கிறது.

ஜுர்மலா:

பெண்கள் அணிக்குரிய பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான (முன்பு பெட் கோப்பை பெயரில் நடந்தது) டென்னிஸ் போட்டியில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இ்ந்திய அணி, லாத்வியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் லாத்வியாவின் ஜுர்மலா நகரில் உள்ள உள்ளரங்க கடினதரை மைதானத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் நடக்கிறது.

இந்தியா, பிளே-ஆப் சுற்றுக்கு வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இந்திய அணியில் சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா, கர்மன் கவுர் தண்டி, ருதுராஜ் போசேல், ஜீல் தேசாய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உலக தரவரிசையில் 174-வது இடம் வகிக்கும் இ்ந்தியாவின் அங்கிதா ரெய்னா ஒற்றையர் பிரிவில் 2017-ம் ஆண்டில் பிரெஞ்ச் ஓபனை வென்ற சாதனையாளரான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவாவுடன் இன்று மோதுகிறார். மற்றொரு ஒற்றையரில் தரவரிசையில் 621-வது இடம் வகிக்கும் கர்மன் கவுர் தண்டி 47-ம் நிலை வீராங்கனையான லாத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்தோவாவை எதிர்கொள்கிறார். மறுநாள் இருவரும் மாற்று ஒற்றையரில் ஆடுவார்கள். தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள லாத்வியாவுக்கு எதிரான ஆட்டம் இந்திய வீராங்கனைகளுக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரட்டையர் பிரிவில் களம் இறங்கும் சானியா மிர்சா, அங்கிதா ரெய்னாவுடன் கைகோர்த்து ஆட உள்ளார். இதில் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு நடக்கும் உலக குரூப் தகுதி சுற்றுக்கு இந்தியா முதல் முறையாக தகுதி பெறும்.

அங்கிதா ரெய்னா கூறுகையில், ‘நாங்கள் பெரும்பாலும் கடின தரைபோட்டிகளில் தான் விளையாடி உள்ளோம். அதனால் களம் இறங்க மிகுந்த உற்சாகத்துடன் தயாராக உள்ளேன். தேசத்துக்காக ஆடும் போது எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பேன்’ என்றார். முதல் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கும், 2-வது நாள் ஆட்டம் மாலை 4.30 மணிக்கும் தொடங்குகிறது. போட்டியை யூரோ விளையாட்டு சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »