Press "Enter" to skip to content

ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்று போட்டிக்கான இந்திய அணியில் சுஷில்குமாருக்கு இடம் மறுப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான மல்யுத்த தகுதி சுற்று போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான மல்யுத்த தகுதி சுற்று போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக்குக்கு தகுதி பெற மல்யுத்தத்தில் நடத்தப்படும் கடைசி தகுதி சுற்று இதுவாகும். இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்களுக்கான 74 கிலோ உடல் எடைப்பிரிவுக்கு முன்னாள் ஆசிய சாம்பியனான அமித் தன்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் மூத்த வீரர் சுஷில்குமாருக்குரிய வாய்ப்பு முற்றிலும் அடைக்கப்பட்டு விட்டது. 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றியவரான 37 வயதான சுஷில்குமாரிடம் அணித் தேர்வில் பெயர் பரிசீலிக்கப்படாதது குறித்து கேட்ட போது, தற்போதைய சூழலில் உயிர் வாழ்வதே மிகவும் முக்கியமானது. இந்திய மல்யுத்த சங்கத்திடம் நான் இன்னும் பேசவில்லை. விரைவில் பேசுவேன்’ என்றார்.

மல்யுத்த சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பிரீ ஸ்டைல் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் ஆசிய தகுதி சுற்று மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் சந்தீப் மானின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. அதனால் அடுத்த நிலையில் உள்ள அமித் தன்கருக்கு வாய்ப்பு வழங்குவது என்று தேர்வு குழு முடிவு செய்திருக்கிறது. இதே போல் 97 கிலோ பிரிவில் சத்யவார்ட் காடியன், 125 கிலோ பிரிவில் சுமித், கிரேக்கோ ரோமன் பிரிவில் சச்சின் ராணா (60 கிலோ), ஆஷூ (67 கிலோ), குர்பிரீத் சிங் (77 கிலோ), சுனில் (87 கிலோ), தீபன்ஷூ (97 கிலோ), நவீன் குமார் (130 கிலோ), பெண்கள் பிரிவில் சீமா (50 கிலோ), நிஷா (68 கிலோ), பூஜா (76 கிலோ) ஆகியோர் பங்கேற்பார்கள்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »