Press "Enter" to skip to content

ராஜஸ்தானுடன் இன்று மோதல் – பெங்களூர் அணிக்கு 7-வது வெற்றி கிடைக்குமா?

ராஜஸ்தானுக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றாலும், தோற்றாலும் அந்த அணி அதே 3-வது இடத்தில் நீடிக்கும்.

துபாய்:

ஐ.பி.எல். போட்டியில் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 42 ஆட்டங்கள் முடிந்து உள்ளன. ஆனால் எந்த ஒரு அணியும் அதிகாரப்பூர்வமாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் 16 புள்ளிகள் பெற்று உள்ளன. இந்த 2 அணிகளும் கிட்டத்தட்ட பிளேஆப் வாய்ப்பை நெருங்கி விட்டன. சென்னை அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன. அதே நேரத்தில் டெல்லி அணிக்கு 3 ஆட்டமே எஞ்சி உள்ளது.

பெங்களூர் அணி 12 புள்ளிகளுடனும், கொல்கத்தா, மும்பை தலா 10 புள்ளிகளுடனும், பஞ்சாப், ராஜஸ்தான் தலா 8 புள்ளிகளுடனும், ஐதராபாத் 4 புள்ளிகளுடனும் உள்ளன. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும்.

43-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. இதில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் அணி ராஜஸ்தானை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் அந்த அணி அதே 3-வது இடத்தில் நீடிக்கும்.

முதல் கட்ட போட்டியில் பெங்களூர் அணி 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும்.

புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூருக்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

இரு அணிகளும் மோதிய போட்டியில் பெங்களூர் 11 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளன. 2 போட்டி முடிவு இல்லை. இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »