- ஜேம்ஸ் கல்லேகர்
- பிபிசி சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர்
பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனில் இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்துக்கு (ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனிகா இணைந்து உருவாக்கியது) அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசர அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆனால் மற்ற தடுப்பூசிகளுடன் இதை எவ்வாறு ஒப்பிடுவது?
ஏன் தடுப்பூசி தேவை?
இன்னும் பல மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் மட்டுமே பல மக்கள் இறப்பதைத் தடுக்க உதவும்.
நம் உடலுக்கு கொரோன வைரஸை எதிர்த்துப் போராட, தடுப்பு மருந்து கற்றுக் கொடுக்கும். அது தான் நம் உடலில் கொரோனா தொற்று பரவாமல் பாதுகாக்கும் அல்லது குறைந்தபட்சமாக கொரோனாவை அதிக ஆபத்தற்ற வைரஸாக்கும்.
தடுப்பூசியுடன், நல்ல சிகிச்சை தான் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பிரச்சனையில் இருந்து வெளி வருவதற்கான ஒரே வழி.
ஆக்ஸ்ஃபோர்டு –அஸ்ட்ராசெனிகா
ஆக்ஸ்ஃபோர்டு தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து, சோதனையில் 70 சதவீத பேரின் உடலில் கொரோனா வைரஸை தடுப்பதால், அந்த மருந்துக்கு டிசம்பர் 30 அன்றே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.
வயதானவர்களின் உடலில் இந்த தடுப்பு மருந்து, வலுவான நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதாக, இந்த சோதனையின் தரவுகள் காட்டுகின்றன.
இந்த மருந்தின் டோஸேஜ்களைச் சரி செய்தால் 90 சதவீதம் வரை பாதுகாப்பளிக்கும் எனத் தரவுகள் கூறுகின்றன.
பிரிட்டன் 100 மில்லியன் டோஸ் மருந்துக்கு வாங்குதல் கொடுத்திருக்கிறது.
இந்த மருந்து இரண்டு டோஸ்களாக வழங்கப்படுகின்றன.
20,000 பேரிடம் இந்த மருந்துக்கான மருத்துவ பரிசோதனைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
விநியோகிக்க மிகவும் எளிதான தடுப்பு மருந்துகளில், இந்த ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பு மருந்தும் ஒன்று எனக் குறிப்பிடலாம். காரணம் இந்த தடுப்பு மருந்தை மிகவும் குறைந்த வெப்பநிலையில் வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
இந்த கொரோனா தடுப்பு மருந்து, சிம்பன்ஸிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட, பலவீனப்படுத்தப்பட்ட சாதாரணமான சளி வைரஸில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வைரஸும் மனிதர்களின் உடலில் பரவிவிடக் கூடாது என செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது.
ஃபைசர் பயோஎன் டெக் தடுப்பூசி
கடந்த நவம்பர் 2020-ல் பைசர் பயோஎன் டெக் நிறுவனம் தன் தடுப்பூசிக்கான சோதனை முடிவுகளை முதலில் வெளியிட்டது.
அந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 95 சதவீதம் எனக் கூறப்பட்டிருந்தது.
பிரிட்டன் இன்னும் 40 மில்லியன் டோஸ் மருந்துகள் பாக்கி பெற வேண்டி இருக்கிறது.
இந்த தடுப்பூசி, மூன்று வார கால இடைவெளியில், இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படுகிறது.
சுமாராக 43,000 பேர் இந்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கெடுத்தார்கள். அவர்களில் யாருக்கும் எந்த வித பாதுகாப்புப் பிரச்சனைகளும் ஏற்படவில்லை.
இந்த கொரோனா தடுப்பு மருந்து -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும். ஜிபிஎஸ் கொண்ட சிறப்புப் பெட்டியில், உலர் பனிக்கட்டிகளுடன் இந்த தடுப்பூசி பாதுகாப்பாக வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 2-ம் தேதி, உலகிலேயே முதன்முறையாக ஃபைசர் பயோஎன் டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை, பரவலான பயன்பாட்டுக்கு அனுமதித்தது பிரிட்டன்.


ஆறு நாட்களுக்குப் பிறகு, ஃபைசரின் இந்த கொரோனா தடுப்பு மருந்து, 90 வயது மார்கரெட் கீனன் என்கிற நோயாளிக்கு, முதன்முதலாக, கன்வென்ட்ரியில் இருக்கும் பல்கலைக்கழக மருத்துவமனையில் வைத்து வழங்கப்பட்டது. அப்போதிலிருந்து, சுமாராக பிரிட்டனில் இருக்கும் ஆறு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது.
இந்த தடுப்பூசியில் கொரோனா வைரசின் ஒரு சிறிய ஜெனடிக் கோட் பயன்படுத்தப்படுகிறது. இந்த கொரோனா தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்திய பின், அதுவே கொரோனா வைரஸின் ஒரு பகுதியை நம் உடலில் உருவாக்கும். அப்போது நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அந்த கொரோனா வைரஸை வெளியில் இருந்து வந்த ஒன்று எனக் கண்டுபிடித்து அதை தாக்கத் தொடங்கும்.
இதுவரை உலக அளவில் இது போன்ற ஆர்.என்.ஏ தடுப்பு மருந்துகளை மனித உடலில் செலுத்த அனுமதித்ததில்லை. ஆனால் பல நோய்களுக்கான மருத்துவ சோதனைகளில், பலரும் ஆர்.என்.ஏ ரக தடுப்பு மருந்துகளைச் செலுத்திக் கொண்டதுண்டு.
மாடர்னா தடுப்புமருந்து

பட மூலாதாரம், MODERNA
ஃபைசர் தடுப்பு மருந்தின் வழிமுறைதான் மாடர்னா தடுப்பு மருந்திலும் பயன்படுத்தப்படுகிறது.
மாடர்னாவின் மருந்து 94.5 சதவீதம் செயல்திறன் கொண்டதாகக் கூறுகிறது அந்நிறுவனம்.
இந்த வசந்த காலத்துக்கு முன், இந்த மருந்தில் ஐந்து மில்லியன் டோஸ்களை பிரிட்டன் அரசு வாங்கும்.
இந்த மருந்தை நான்கு வார இடைவெளியில் இரண்டு டோஸ்கள் வழங்குகிறார்கள். 30,000 பேர் இந்த சோதனையில் பங்கெடுத்தார்கள், அதில் பாதி பேருக்கு தடுப்பு மருந்தும், மீதிபேருக்கு வெற்றுத் திரவமும் வழங்கப்பட்டது.
பைசர் மருந்தை விட, மாடர்னாவின் மருந்து சேமிப்பதற்கு எளிதானது. இந்த நிறுவனத்தின் மருந்து -20 டிகிரி செல்சியஸில் ஆறு மாதங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
வேறு என்ன தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன?
வரும் வாரங்களில் மற்ற கொரோனா தடுப்பு மருந்துகளின் சோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ரஷ்யாவின் ஸ்புட்நிக் V மருந்து, 92% செயல்திறன் கொண்டது என அதன் தரவுகள் கூறுகின்றன. இது ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பு மருந்து போலச் செயல்படுகிறது.
ஒரு டோஸுக்கு பதிலாக இரண்டு டோஸ் மருந்து கொடுத்தால் நீண்ட நாட்களுக்கு எதிர்ப்புத் திறனைக் கொடுக்குமா? என ஜென்சன் என்கிற மருந்து நிறுவனம், உலகம் முழுக்க 30,000 தன்னார்வலர்களிடம் சோதனை நடத்தவிருக்கிறது. பிரிட்டனில் 6,000 தன்னார்வலர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறது.
வூஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயாலஜிக்கல் ப்ராடெக்ட்ஸ், சீனாவின் சினோஃபார்ம், ரஷ்யாவின் கமலேயா ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் போன்றவர்களின் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன.
சீனாவைச் சேர்ந்த சினோவேக் என்கிற மருந்து நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து, பிரேசிலில் பரிசோதிக்கப்பட்டு வந்தது. அம்மருந்து கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியதால், ரத்து செய்யப்பட்டது. இந்த சினோவேக் கொரோனா தடுப்பு மருந்தால் ஒரு தன்னார்வலர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் எந்த முறை நல்ல பலன்களைக் கொடுக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com