ஆதி நடிப்பில் உருவாகி வரும் க்ளாப் படத்திற்காக ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக ஒரு தடகள ஸ்டேடியம் செட் உருவாக்க இருக்கிறார்கள்.
ஆதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘க்ளாப்’. பிக் பிரிண்ட் பிட்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்க, பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் இப்படம் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்ததை பற்றி தயாரிப்பாளர் கார்த்திகேயன் பெருமிதத்தோடு கூறுகிறார்.
‘எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. இதன் மூலம் இந்த படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. திட்டமிட்ட படியே, துரித வேகத்தில் இதை செய்து முடித்ததற்கு இயக்குனர் பிருதிவி ஆதித்யா, மற்றும் அவரது குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அவருக்கு சிறப்பாக ஒத்துழைத்த கதாநாயகன் ஆதி, கதாநாயகி அகன்ஷா சிங், கிருஷ்ணா குரூப், நாசர் சார், பிரகாஷ் ராஜ் சார், முனீஸ்காந்த், மைம்கோபி, மற்றும் எல்லோரும் இந்த பாராட்டுக்கு உரியவர்கள்.
அறிமுக இயக்குனர்கள் எல்லோருமே கதை சொல்லும் விதத்திலும், அதை நேர்த்தியாக படமாக்குவதிலும் திறமையானவர்களாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் அதை திட்டமிட்டு, தரம் கெடாமல் துரித நேரத்தில் முடிப்பது மட்டுமே அந்த இயக்குனரின் முழுமையான திறமை ஆகும். அந்த வகையில் இயக்குனர் பிருதிவியை அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் என்கிற முறையில் எனக்கு பெருமையே.
செப்டம்பர் மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக, ஏராளமான பொருட்செலவில் ஒரு தடகள ஸ்டேடியம் உருவாக, அங்கே தொடங்குகிறது. இளையராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பதே மிக மிக பெருமை” என்றுக் கூறினார்.
Related Tags :
Source: Malai Malar