சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம் பற்றி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, சூளைமேடு சௌராஷ்டிரா நகரைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஸ்வாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில், கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அதே ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி புழல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். சிறையில் மின்சார வயரை கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தமிழில் ‘நுங்கம்பாக்கம்’ என்ற திரைப்படம் தயாரானது. ’உளவுத்துறை’ மற்றும் ’ஜனனம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரமேஷ் செல்வன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் வெளியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தயாராகிவிட்டாலும், அரசியல் எதிர்ப்பு காரணமாகவும், சட்டச்சிக்கல் காரணமாகவும் இந்த படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அரசியல் மற்றும் சட்டப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து இப்படத்தை அக்டோபர் மாதம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Source: Malai Malar