‘நேரம்’, ‘பிரேமம்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த அல்போன்ஸ் புத்திரன், 5 ஆண்டுகளுக்கு பின் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து `பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான `பிரேமம்’, தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட `பிரேமம்’ படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.
‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில், தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: “எனது அடுத்த படத்தின் பெயர் ‘பாட்டு’. பகத் பாசில் ஹீரோவாக நடிக்கிறார். யு.ஜி.எம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இம்முறை நான் இசையமைப்பாளராக மாறியுள்ளேன். இப்படம் மலையாளத்தில் எடுக்கப்படும். படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப குழு பற்றிய விவரத்தை படம் எடுக்கப்படும்போது தெரிவிக்கிறேன்”. என அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.
Source: Malai Malar