சென்னையில் நடந்த விக்ரம் படத்தின் இசை மற்றும் பட விளம்பரம் வெளியீட்டு விழாவில், நான் மிரட்டுகிறேன் என்றார்கள், யார் மிரட்டினாலும் கமல் பயப்பட மாட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை மற்றும் பட விளம்பரம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உதயநிதி
விக்ரம் பட விழாவில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
“நான் மிரட்டுகிறேன் என்றார்கள், கமலை மிரட்டி இப்படத்தை வாங்கிவிட்டீர்களா என கேட்டார்கள், யார் மிரட்டினாலும் அவர் பயப்படக்கூடியவர் அல்ல, அவரை யாரும் மிரட்ட முடியாது. கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கமல் நடிப்பை பார்த்து வளர்ந்தவன் நான். அரசியல் கட்சி தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள், ஆனால் ஒன்னே ஒன்னு வருடத்திற்கு ஒரு படமாவது கமல்ஹாசன் நடிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.” என்று பேசினார்.
[embedded content]
Source: Malai Malar