உலங்கூர்தி பேர ஊழல்: பிணை கோரிய இடைத் தரகர் மைக்கேல்- 12-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
Feb 8, 2019
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் உலங்கூர்தி பேர ஊழல் வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் பிணை கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 உலங்கூர்திகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில்
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.
இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார்.
மைக்கேலை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டார்.சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மைக்கேல், சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளில் பிணை வழங்கக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார்.
இதை விசாரித்த நீதிமன்றம், பிணை மனு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கருத்தைக் கேட்டு, விசாரணையை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Source: The Hindu