“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும். கருணாநிதி மகன் என்றெல்லாம் ஸ்டாலின் முதல்வராகவில்லை. கடும் உழைப்புதான் அவரை முதல்வராக்கியுள்ளது” என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் சூரி இன்று பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வரின் 70-வது பிறந்தநாளை மிகப்பெரிய அரசியல் பயணத்தில் முதல்வர் கடந்து வந்த பாதையை சாதனைகளை பதிவு செய்து உள்ளனர். நாம் 14 வயதில் கண்மாயில் விளையாடி இருப்போம். ஓடியாடி விளையாடி இருப்போம்.
ஆனால் 14, 15 வயதில் ஸ்டாலின் என்ற மாணவர் கட்சிக்கு பிரசாரம் செய்து, 15 வயதில் இளைஞர் திமுக என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, 20 வயதில் பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார். அதற்கு பின்பு அரசியல் பயணத்தில் எதிர்பாராத இன்னல்களை கடந்து வந்துள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிசாவில் அவர் சிறைக்குச் சென்ற போது உள்ளே அவர் அவ்வளவு இன்னல்களை சந்தித்து இருக்கிறார். அதற்கு பின்பு திரைப்படம் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். தயாரிப்பாளராக, நடிகராக என திரைப்படத்தில் தன்னை நிரூபித்து காட்டிய அவர் அரசியல் பயணத்தில் தொண்டர்களுடன் தொண்டராக இருந்து கடைக்கோடி தொண்டனாக இருந்து பயணித்துள்ளார்.
தன்னுடைய 36 வயதில் சட்டமன்ற உறுப்பினராகி 43 வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற மிகப்பெரிய பதவியை மக்கள் கொடுத்தார்கள். மேயராக வந்த பின்பு சிங்காரச் சென்னை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி சிங்கார சென்னையில் பல பூங்காக்களை உருவாக்கி, பல மேம்பாலங்கள், பல குறும்பாலங்களை உருவாக்கியிருக்கிறார். தூய்மை பணியாளர்களுக்கு நவீன வசதிகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார். இன்று மக்கள் அவருக்கு உரிய இடத்தை கொடுத்து அழகு பார்த்து வருகிறார்கள். இது மிகப்பெரிய விஷயம். இது சாதாரண விஷயம் கிடையாது.ஒவ்வொரு போட்டோவையும் பார்க்கும்போது ஒரு போட்டோ சிரிக்க வைக்கிறது, ஒரு போட்டோ அழ வைக்கிறது. ஒரு போட்டோ பிரமிக்க வைக்கிறது.
ஒரு போட்டோ கதை சொல்லுகிறது. ஒவ்வொரு படத்திலும் வரலாறு இருக்கிறது. கருணாநிதியின் மகன் என்றெல்லாம் அவர் பதவிக்கு வரவில்லை. கடும் உழைப்பு செலுத்தி வந்திருக்கிறார். அவமானம், அசிங்கங்களை தாங்கி இன்று வந்திருக்கிறார்.
சென்னையில் வெள்ளம் வந்த போதும் அவ்வளவு உழைப்பு உழைத்தார்; கொரோனாவின் போது கடவுளாக வந்து கொரோனா உடையை அணிந்து மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனைக்குள் செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியும் கூட, அதையும் மீறி மருத்துவமனைக்குள் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் சொல்லி வந்தார்” என்றார்.
மேலும், “என்னை இரண்டு புகைப்படங்கள் கலங்கடிக்க வைத்தன. ஒன்று, கருணாநிதி பக்கத்தில் இருந்து, கடைசி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் முதலில் அப்பா என்று அழைக்கட்டுமா? என்று கேட்ட அந்த புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது.
கருணாநிதியை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய நீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்பு வந்தது. அப்போது அப்படியே சிலையாக அமைதியாக நிற்கிற அந்த புகைப்படம் இந்த இரண்டு புகைப்படமும் என்னை கலங்க வைத்தது.நம் முதல்வர் ஸ்டாலினின் வரலாறை தாராளமாக ஒரு படமாக எடுக்கலாம். கொஞ்ச காலம் பின்பு கண்டிப்பாக முதல்வர் அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பார்கள்” என்று பேசினார்.
Source: Hindu