தென் கிழக்கு ஆசிய நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
“கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதிகம் பேர் இதனால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் பூனம் கெட்ரபால் சிங் தெரிவித்தார்
“பெரும் எண்ணிக்கையில் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதை உணர்த்துவதோடு, தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறது. மேலும் இது பரவாமல் இருக்க நாம் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக இதை உடனடியாக எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளில் எட்டு நாடுகளில் தற்போது இந்த வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது?
தாய்லாந்து – 177
இந்தோனீசியா – 134
இந்தியா – 125
இலங்கை – 19
மாலத்தீவுகள் – 13
வங்கதேசம் – 5
நேபாள் – 1
பூடான் – 1
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிஎன்என் தொலைக்காட்சி மூடப்பட்டது.
அந்த அலுவலகம் இருக்கும் கட்டடத்தில் ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த முக்கிய தொலைக்காட்சி சேவை குறைந்தது 24 மணி நேரத்திற்காவது மூடப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில நிகழ்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்தும் பிபிசி நியூஸ்
கொரோனா வைரஸ் பிபிசி செய்தியறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் வீட்டிலிருந்த படியே வேலை பார்த்தும், பிபிசி நியூஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அலுவலகத்திலிருந்துதான் இயங்க முடியும் என்பதால், Politics Live, போன்ற சில நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாகவும், பிபிசி தற்போதுள்ள முக்கிய செய்திகளில் கவனம் செலுத்தும் என்றும் அதன் இயக்குநர் பிரான் அன்ஸ்வர்த் தெரிவித்துள்ளார்.
“சுகாதார அவசர நிலையில் நம்பத்தக்க, சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம். அதில் பிபிசிக்கு முக்கிய பங்கு உண்டு” என்று அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com