Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இருப்பவர்கள் இபுபுருஃபென் சாப்பிடுவது ஆபத்தானதா?

கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் இபுபுருஃபென் எடுத்துக் கொள்வது ஆபத்தானதாக இருக்கும் என்று ஆன்லைனில் கதைகள் உலவிக் கொண்டிருக்கின்றன. உரிய மருத்துவ ஆலோசனைகளுடன், உண்மைகளைத் திரித்துக் கூறும் வகையிலான போலியான தகவல்களும் பரவிக் கொண்டிருக்கின்றன.

பிபிசிக்கு பேட்டி அளித்த மருத்துவ வல்லுநர்கள், முன்னர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்கு இபுபுருஃபென் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறினர். இருந்தாலும், வேறு தேவைகளுக்காக ஏற்கெனவே அந்த மருந்தை எடுத்துக் கொள்பவர்கள் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் அதை நிறுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டனர். பாராசிட்டமால் மற்றும் இபுபுருஃபென் ஆகியவை உடல் வெப்பத்தைக் குறைக்கும், ஃப்ளூ போன்ற அறிகுறிகளைக் குறைக்க உதவும். ஆனால் இபுபுருஃபென் மற்றும் ஸ்டீராய்ட் அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் (NSAID) எல்லோருக்கும் உகந்தவை அல்ல. இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக ஆஸ்துமா, இதயம் மற்றும் ரத்த ஓட்டப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

என்.எச்.எஸ். இணையதளத்தில் முன்னர் பாராசிட்டமால் மற்றும் இபுபுருஃபென் ஆகியவை பரிந்துரைக்கப் பட்டிருந்தன. ஆனால் பிறகு அது அந்த அறிவுரை “கொரோனா வைரஸ் பாதிப்பை இபுபுருஃபென் மோசமாக்கும் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எங்களுக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரையில், உங்களுக்கு பாராசிட்டமால் உகந்ததாக இருக்காது என்று டாக்டர் கூறாதவரையில், கொரோனா வைரஸ் அறிகுறித்து சிகிச்சை அளிக்க பாரசிட்டமால் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மாற்றப்பட்டுவிட்டது.

ஏற்கெனவே டாக்டர் பரிந்துரையின்படி இபுபுருஃபென் எடுத்துக் கொண்டு வருபவர்கள், பரிசோதனை செய்யாமல் அதை நிறுத்திவிடக் கூடாது என்றும் என்.எச்.எஸ். கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தீவிரத்தைக் குறைப்பதிலோ அல்லது அதன் பாதிப்பு காலத்தைக் குறைப்பதிலோ இபுபுருஃபென்னுக்கு குறிப்பிடத்தக்க பங்கு ஏதும் உள்ளதா என்று இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் – ஆரோக்கியமானவர்களுக்கு அல்லது பாதிப்பு சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு – நோய் தாக்கும் வாய்ப்புள்ள நோயாளிகளுக்கு “முதல் தேர்வாக பாராசிட்டமாலை வைத்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும் போலத் தெரிகிறது” என்று சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவத்துக்கான லண்டன் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் சார்லோட்டெ வார்ரென் – காஷ் கூறியுள்ளார்.

மற்ற சில மூச்சுக் கோளாறுகள் இருப்பவர்களுக்கு நோய் தீவிரமடைவதற்கு இபுபுருஃபென் காரணமாக இருப்பதாகக் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

பொய்க் கதைகள்

ஆனால் ஆலோசனை எதுவாக இருந்தாலும், ஆன்லைனில் நிறைய தவறான தகவல்கள் இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றன. வாட்ஸாப் மூலம் பரவும் போலி தகவல்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன:

  • “கார்க் நகரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நான்கு இளைஞர்கள் சிகிச்சை பெற்றனர், அவர்களுக்கு காய்ச்சல் எதுவும் இல்லை – அழற்சிக்கு எதிரான மருந்துகளை அவர்கள் எடுத்துக் கொண்டிருந்தனர், அதனால் அதிக தீவிரமான உடல்நலக் குறைவு ஏற்பட்டது” (பொய்த் தகவல்)
  • கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் இபுபுருஃபென் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வியன்னா பல்கலைக்கழகம் ஒரு குறிப்பாணை வெளியிட்டுள்ளது. ஏனெனில் “கொரோனா வைரஸ் பெருக்கத்தின் வேகத்தை அது அதிகரிக்கச் செய்கிறது என்று கண்டறியப் பட்டுள்ளது, அதனால்தான் இத்தாலி மக்கள் இப்போது தீவிர நோய் பரவலுக்கு ஆளாகியுள்ளனர்.” (பொய்ச் செய்தி)
  • “பிரான்ஸில் டவ்லவ்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில், இளைஞர்கள் மத்தியில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகள் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. அறிகுறிகள் தென்பட்டதும், இபுபுருஃபென் போன்ற வலி நிவாரணிகளை அவர்கள் எடுத்துக் கொண்டனர்.” (பொய்ச் செய்தி)

வாட்ஸாப்பில் வலம் வரும் இதுபோன்ற கதைகள், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இதுபோல காப்பி பேஸ்ட் செய்யப்படும் தகவல்கள், பார்வர்டு ஆகி வந்தவை என்றும், முதலில் இதைத் தயாரித்தது யார் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் கடைசியாக இதை அனுப்பி வைத்தவர் கூறுவார்.

இந்த தகவல்கள் எல்லாமே பொய்யானவை

கார்க் நகரில் உள்ள கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் குறித்த வாட்ஸப் தகவல் “போலியானது” என்று அயர்லாந்தைச் சேர்ந்த தொற்றுநோய்கள் சங்கம் கூறியுள்ளது. இந்தத் தகவல்களைப் “புறக்கணித்து, நீக்கிவிடுமாறு” அது கேட்டுக்கொண்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் வலம் வந்து கொண்டிருப்பதாக டவ்லவ்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனை கூறியுள்ளது. மருத்துவ ரகசியக் காப்பு காரணமாக, நோயாளிகள் பற்றிய தகவல்களை தாங்கள் வெளியிடுவதில்லை என்று அந்தப் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

இபுபுருஃபென் மற்றும் கோவிட் -19 பற்றி நாம் என்ன அறிந்து கொள்ள வேண்டும்?

இபுபுருஃபென் மற்றும் புதிய கொரோனா வைரஸ் (கோவிட் – 19) பற்றி இதுவரை எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

மற்ற சுவாசத் தொற்றுகள் தீவிரப்படுவதற்கும் இபுபுருஃபென் மருந்துக்கும் தொடர்பு இருப்பதாக என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இவற்றை இபுபுருஃபென்தான் உருவாக்குகிறதா என்பதும் நமக்குத் தெரியவில்லை என்று சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப சுகாதார ஆராய்ச்சிப் பிரிவின் பேராசிரியர் பால் லிட்டில் கூறியுள்ளார்.

இபுபுருஃபென் அழற்சிக்கு எதிரான குணங்கள், உடலின் நோய் எதிர்ப்பாற்றலை “மழுங்கடித்துவிடும்” என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

“சுவாசத் தொற்று காலத்தில் இபுபுருஃபென் பயன்படுத்தினால், நோயை தீவிரமாக்கும் அல்லது வேறு சிக்கல்களை உருவாக்கும் என்பதை பல ஆய்வுகள் காட்டியுள்ளன” என்று ரீடிங் பல்கலைக்கழக பேராசிரியர் பராஸ்ட்டவ் டான்யாய் கூறியுள்ளார்.

ஆனால், “கோவிட் – 19 பாதித்த ஆரோக்கியமான 25 வயது இளைஞர் ஒருவர் இபுபுருஃபென் சாப்பிடும்போது, சிக்கல்கள் அதிகரித்துள்ளன என்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று அந்தப் பெண் பேராசிரியர் கூறினார்.

பல மருந்துக் கடைகளில் பாரசிட்டமால் மருந்துகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

புரளிகள் பரவியதால் குழப்பங்கள் ஏற்பட்டன

“இந்த கொரோனா வைரஸ் காலத்தில், தொற்று அல்லது காய்ச்சல் நோய் இருப்பவர்களிடத்தில் ஸ்டீராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் சிக்கலை உருவாக்கும் வாய்ப்பு பற்றி நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்” என்று தனது ட்விட்டர் பதிவில், டவ்லவ்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனை டாக்டர் ஜீன் லூயில் மோன்டாஸ்டிரக் கூறியதை அடுத்து. இபுபுருஃபென் பயன்பாடு பற்றி கவலை ஏற்பட்டது.

“அழற்சி எதிர்ப்பு மருந்துகள் தொற்றுகளைத் தீவிரப்படுத்துவதாக இருக்கலாம்” என்று பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் ஒலிவியர் வெரான் ட்விட்டரில் பதிவிட்ட தகவல் 43,000 முறைகளுக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை எடுத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு முன்பு, தங்கள் டாக்டரை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“இபுபுருஃபென் மருந்து, நோயை தீவிரமாக்கலாம், காய்ச்சல் அறிகுறி இல்லாத இளைய, நடுத்தர வயது மற்றும் முதிய நோயாளிகளுக்கும் இது பாதிப்பை தீவிரமாக்கலாம்” என்பது உள்ளிட்ட பல தகவல்கள் இணையதளத்தில் உலவிக் கொண்டிருக்கின்றன. அது ட்விட்டரில் 94,000 முறைகளுக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்களிடம் இருந்து இதுகுறித்து ஒருமித்த கருத்து இல்லாதது, ஆன்லைனில் புரளிகள் பரவ ஏதுவாக அமைந்துவிட்டன. ஆங்கிலேயர்கள் மற்றும் ஜெர்மானியர்களில் பலரும் இதற்குப் பலியாகியுள்ளதாக வியன்னா பல்கலைக்கழக ஆய்வகம் கண்டறிந்துள்ளது.

ட்விட்டர் மற்றும் முகநூல் பதிவுகள் – பெரும்பாலும் வேறு இடத்தில் இருந்து வெட்டி இங்கே ஒட்டுதல் முறை பின்பற்றப்படும் நிலையில், தாங்கள் அந்தக் “குடும்பத்தில் ஒரு மருத்துவர்” என்ற ரீதியில் தகவல்கள் பதிவிடுகிறார்கள். “கோவிட் – 19 பாதிப்பால் உயிரிழந்த பெரும்பாலானோர் இபுபுருஃபென் சாப்பிட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். கொரோனா வைரஸ் `’இபுபுருபெனில் உயிர்வாழ்கிறது என்று சில பதிவுகள் கூறுகின்றன. இது உண்மை என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இந்த ஆன்லைன் புரளியும் ஜெர்மானிய மொழியில் வாட்ஸாப்பில் பரவியது. குரல் தகவலாகவும், வரி வடிவத் தகவலாகவும் வலம் வந்தது. இத்தாலியில் கோவிட் – 19 மரணங்கள் பற்றி வியன்னா பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது என்றும், இத்தாலிய மரணங்களில் பெரும்பாலானவை தாங்களாகவே இபுபுருஃபென் எடுத்துக் கொண்டதால் வந்தவை என்றும் இளம் தாயார் ஒருவர் கூறியதாக அந்தச் செய்தி பரவியது. இதுபோன்ற தகவல்களை நிரூபிக்க போதிய ஆதாரம் எதுவும் இல்லை என்று ஜெர்மன் பார்மசூட்டிகல் செய்தி இணையதளம் aponet.de கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »