Press "Enter" to skip to content

உலகம் முழுவதும் தொற்று நோய் பரவும் நேரத்தில் ராணுவம் எப்படி உதவ முடியும் ?

ஜொனாதன் மார்க்கஸ்
பிபிசி செய்தியாளர்

ஒரு நாட்டின் நகர வீதிகளில் ராணுவ வீரர்கள் நடமாடுவதை அரசியல் தலைவர்கள் விரும்புவது இல்லையா ? உலகம் முழுவதும் பரவும் உயிர்க் கொல்லி நோயை எதிர்கொள்ள ராணுவம் அவசியமா ? பிரிட்டன், அமெரிக்க ராணுவப்படைகள் ஏன் தயார் நிலையில் உள்ளன?

பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணுவ வீரர்களின் தங்களின் பணி நேரம் முடிந்து மற்ற ராணுவவீரர்களை மாற்றி பணியில் அமர்ந்துகின்றனர், ஆனால் வழக்கம்போல் அல்லாமல், இசை மற்றும் கொண்டாட்டங்கள் இன்றி அமைதியாக இந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடக்கிறது. கடுமையான மழை மற்றும் அவசர நேரத்தில் மற்றொரு நிகழ்வில் பணியாற்ற வேண்டிய சூழலில் இவ்வாறு அமைதியான அணிவகுப்பு நடைபெறும். ஆனால் தற்போது அரசாங்கம் அனைவரையும் நெருங்கிய தொடர்ப்பில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தியதால், ராணுவ வீரர்கள் தங்களின் அலுவல் பொறுப்பை அமைதியாக ஏற்கின்றனர்.

ராணுவ வீரர்களின் முதன்மையான வேலை நாட்டைப் பாதுகாப்பதும், தேவைப்பட்டால், முழு அளவிலான போரில் போரிடுவதும் ஆகும். ஆனால் இன்று பல உலக நாடுகள் அதிக உதவி தேவைப்படும் அவசர காலத்தில் அந்நாட்டு ராணுவ வீரர்களை பணியில் அமர்த்துகின்றன. அதேபோல கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளவும் சில நாடுகளில் ராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் பல நாடுகளின் ராணுவத்தின் உதவியை பெறவும் ஆலோசித்து வருகின்றனர்.

ஏற்கனவே ராணுவ வீரர்களின் கடமைகள் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அமெரிக்கப் படைகள் தங்கள் நாட்டு துருப்புகளை வெளிநாடுகளின் பணியமர்த்தும் நடவடிக்கைகளை தற்போதைக்கு நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறு பல நாடுகளின் ராணுவத்துக்கு தமது முழு நேரப் பணிகளை மேற்கொள்ள அவகாசம் இல்லை. பதிலாக அந்த ராணுவங்கள் கொரோனா பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.

பல உலக நாடுகளில் ராணுவ வீரர்கள் வீதிகளில் பணியமர்த்தப்பட்டால் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதாக பொருள் கொள்ளப்படும். ஆனால் மேற்கு ஐரோப்பாவில் ராணுவத்தை பணியில் அமர்த்துவது புதிதல்ல. மழை வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் குறைந்த அளவிலாவது ராணுவ வீரர்களும், விமானப் படை வீரர்களும் மீட்பு பணியில் அமர்த்தப்படுவார்கள். இன்னும் பல ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பல பொதுஇடங்களில் எப்போதுமே ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டனில் ஏற்கனவே 20,000க்கும் மேற்பட்ட துருப்புகள், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளன. ராணுவத்தால் எந்தெந்த பணிகளை மேற்கொள்ள முடியும் ?

பயிற்சி பெற்ற, மற்றும் ஒழுங்கமைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறமையுள்ள ஆண்களையும் பெண்களையுமே ஆயுதப்படையில் பணி அமர்த்துகின்றனர். மிகக் குறைந்த கால அவகாசத்தில் முடிவெடுக்கும் திறனும், அதற்கான அதிகாரமும் உள்ளவர்களாக ராணுவப் படையினர் திகழ்கின்றனர்.

பல வசதிகளை கொண்டதாகவே ராணுவத் தளங்கள் அமைக்கப்படுகின்றன.

மருத்துவ உதவி

ராணுவத்துறையில் மிகவும் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் பணிபுரிவார்கள். ஆனால் எண்ணிக்கையில் மிக குறைந்த அளவிலேயே பணியமர்த்தப்படுவார்கள். சில உலகநாடுகளால் அமெரிக்க ராணுவத்தின் உதவியைப் பெற முடியும். ஏற்கனவே அமெரிக்க ராணுவத்தின் பென்டகன் தலைமையகம் தங்களிடம் ஐந்து மில்லியன் முகக் கவசம் இருப்பதாகவும், அதை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் 2000 சுவாச கருவிகளையும் சிகிச்சைக்காக தன்னிடம் உதவி கேட்கும் நாட்டிற்கு வழங்க முடியும் என்றும் பெண்டகன் கூறியுள்ளது.

இரண்டு பாதுகாப்புப் படை கப்பல்களை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த தயாராகி வருகிறது அமெரிக்கா. மிக பெரிய துறைமுகம் உள்ள நகரத்திலேயே இந்த கப்பல்களை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த மிதக்கும் மருத்துவ வார்டுகளால் பெரிய அளவில் தொற்றை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், நகரத்தில் உள்ள மருத்துவ வசதிகளின் மேல் உள்ள அழுத்தத்தை போக்க சிறிய பங்கு வகிக்க முடியும்.

பொதுவாகவே ராணுவ வீரர்கள் அனைவரும் அடிப்படை மருத்துவ உதவி மேற்கொள்வதில் நன்கு பயிற்சி பெற்றவர்கள். எனவே தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுடன் சேர்ந்து பலவிதத்தில் உதவ முடியும். தற்காலிக “கள” மருத்துவமனைகள் மற்றும் அதற்கு தேவையான மருத்துவ வசதிகளை ஒழுங்கமைக்க ராணுவ வீரர்கள் நிச்சயம் உதவ முடியும்.

போக்குவரத்து சேவைகள்

நோயாளிகளை பாதுகாப்பாகவும் தொற்று மேற்கொண்டு பரவாத வகையிலும் மருத்துவனைக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்த வேண்டும். எனவே ராணுவத்தால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும். மேலும் பிரிட்டனில் மருத்தவ உபகரணங்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க ராணுவ உதவியை நாடுகின்றனர். மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து செல்ல தேவையான வழிமுறைகளை ராணுவ வீரர்கள் கற்றுக்கொள்கின்றனர்.

பல உலக நாடுகள் தங்கள் எல்லையை முடக்கியிருக்கும் நிலையில் எல்லைப் பாதுகாப்பிற்கும் ராணுவத்தினரின் உதவி தேவைப்படும்.

பாதுகாப்பு மற்றும் பொது உத்தரவு

ஒரு நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அந்த உத்தரவை மேற்பார்வையிட ராணுவத்தினரை பணியில் அமர்த்தலாம். ஆனால் மேற்கத்திய நாடுகள் காவல்துறையினரை வைத்தே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க விரும்பும். இன்னும் சில நாடுகள் தங்களின் துணை ராணுவ படையினரை பணியில் அமர்த்த விரும்பும். குறிப்பாக அமெரிக்காவில் ஆளுநரின் உத்தரவுப்படிதான் துணை ராணுவ படை பணியில் அமர்த்தப்படும்.

மேலும் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அரசாங்கத்திற்கு உறுதிப்படுத்துவதே ராணுவத்தின் பெரும் பொறுப்பு.

உலக அளவில் நோய்த் தொற்று பரவும் நேரத்தில் ராணுவத்தின் உதவியை பெறுவது மட்டும் ஒரே தீர்வல்ல. ஆனால் தொற்றை எதிர்கொள்ள அவர்களின் பங்களிப்பும் தேவை. ராணுவ வீரர்களையும் தொற்று விட்டுவைக்கப்போவதில்லை.

எடுத்துக்காட்டாக ஐரோப்பாவில் உள்ள 2,600 அமெரிக்கப் படையினர் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் ராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் நிக்கோலஸ் கூறுகையில், இந்த போரில் போட்டியிட ராணுவத்தினர் தயாராக வேண்டும், “நாம் போரை எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது”, என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »